11. பல்குறிப்பின என்ற தொடருக்கு உவமச் சொற்கள் தொழில் முதனிலைச் சொல்லாயும் பெயரெச்சச் சொல்லாயும் வினையெச்சச் சொல்லாயும், வினைமுற்றுச் சொல்லாயும் அமைந்து பொருள் விளக்கம் செய்யும் என்ற விளக்கம் முன்னைய உரைகளினும் விரிவானது. இன் என்பது இன்ன என்பதன் கடைக்குறை-என என்பது என்ன என்பதன் விகாரம் என்று இவர் கருதுகிறார். |
உவமம் எனினும் உவம உருபெனினும் உவமச்சொல் எனினும் உவம வாய்பாடு எனினும் ஒக்கும். எனினும் இவை வேற்றுமை உருபுகள் போலக் கருதத் தக்கன அல்ல என்ற செய்தியின் விளக்கம் புதுமையானதும் தேவையானதுமாகும். உவம உருபுகள் வினைத்தன்மையுற்றுப் பொருளை உணர்த்தி வரும் என்றும் சிலர் சில பெயராகி நிற்கும் என்றும் கூறுவது பொருந்தாது என்பதனையும் விளக்கியுள்ளார். |
12-16. உவமச் சொற்கள் அவற்றின் உரியடிகளை ஓர்ந்து வினை, பயன், மெய், உரு என்ற நான்கற்கும் சிறந்துரிமை பெற்று வருமாற்றை இவர் விளக்குவது இனிது. |
17. 'தத்தம் மரபின்' என்ற நூற்பாவின் பொருள் விளக்கமாக அமைந்துள்ளது. |
18. நாலிரண்டாகும் என்னும் நூற்பாவின் புத்துரை இனிது. இதற்கு விரிவான எடுத்துக்காட்டுக்கள் தரப் பெற்றுள்ளன. இதற்கு முன்னையோர் உரை உவமம் பற்றிய இலக்கணம் யாதொன்றும் புதிதாகப் பெறப்படுதலில்லை என்று புறக்கணிக்கப்பட்டுள்ளன. பெருமையும் சிறுமையும் என்ற நூற்பாவாலேயே எண்வகைச் சுவைகளும் உவமந்தோன்ற நிலைக்களமாகும் என்பது போந்த பொருளாக அமையாதோ என்ற ஐயம் தெளிவுபெறவில்லை. |
20. "உவமப்பொருளின் உற்றது உணரும்" உரிய எடுத்துக்காட்டுக்களும் விளக்கங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. |
22. 'இரட்டைக்கிளவி' என்ற நூற்பா உரை இளம்பூரணர் கருத்தை ஒட்டி அமைந்துள்ளது. பேராசிரியர் குறிப்பிடும் உவமம் அடையடுத்த உவமம் என்ற கருத்துப் பொருத்தமானது. |
23. உள்ளுறை உவமம் பற்றிய பாயிரம் மிகத் தெளிவாக உள்ளுறை உவமத்தை விளக்குதலின் அது மிகத்தேவையானது. |
25. உள்ளுறை உவமம் தோன்றும் நிலைக்களம் நோயும் இன்பமும் துனியும் என்பனவே. சிறப்பு நலன் முதலியவையல்ல என்பது நன்கு விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுக்களும் விளக்கங்களும் சிறப்பாக உள்ளன. |