332மெய்ப்பாட்டியல்

கண்போல் மலர்தலும் அரிதவள் 

தன்போற் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே

(ஐங்-299)
 

எனவரும்.  இதன்கண்  தலைவியின்  கண்  மலர்ந்தது எனக் கூறியதனான்
தலைவன் எழிலுடைமையும் விளங்கும்.
 

6. நிறுத்த காமவாயிலாவது : நிலைபேறுடைய  காம  ஒழுக்கத்திற்குரிய
உள்ளக்கிளர்ச்சி.
 

எ - டு :

ஒடுங்கீ ரோதி ஒண்ணுதற் குறுமகள் 

நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே 

இனையளென் றவட்புனையள வறியேன் 

சிலமெல் லியவே கிளவி 

அணைமெல் லியல்யான் முயங்குங் காலே 

(குறு-70)
 

நறுந்தண்ணீரள்     என்பதனால்     தலைவனது     உள்ளக்கிளர்ச்சியும்
சிலமெல்லியவே கிளவி  என்பதனால் தலைவியின்  உள்ளக்   கிளர்ச்சியும்
ஒருங்கொத்தமைந்தமை கண்டு கொள்க.
 

அன்பு   எனப்பொருள்   கூறுவார்  பேராசிரியர். அஃது  யாவர்க்கும்
வேண்டும் பொதுக்குணமாகலின் ஈண்டைக்குச் சிறவாமையறிக.
 

7. நிறையாவது : சால்பு.  அடக்கமெனினும்  ஒக்கும். அஃதாவது  மறை
பிறரறியாமல் நெஞ்சினை நிறுத்துதல்.
 

எ - டு :

யாயா கியளே மாஅ யோளே 

மடைமாண் செப்பின் தமிய வைகிய 

பெய்யாப் பூவின் மெய்சா யினளே 

பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் 

இனமீ னிருங்கழி ஓதம் மல்குதொறும் 

கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் 

தண்ணந் துறைவன் கொடுமை 

நம்முன் நாணிக் கரப்பா டும்மே 

(குறு-9)
 

இது தலைமகள் நிறை.
 

வல்லாரை வழிபட்டொன் றறிந்தான் போல 

நல்லார்கட் டோன்றும் அடக்கமு முடையன் 

(கலி-47)
 

என்பது தலைமகன் நிறை.
 

8. அருளாவது ஒருவர் ஒருவரின் குறையினை நிறையாக ஏற்றொழுகும்
மனமாட்சி.  அருளுடைமை   என்னும்  பொதுக்குணம்  ஈண்டுச் சிறப்புப்
பொருள் படநின்றது. பொறை வேறு;  குறையை  நிறையாகக்  கொள்ளும்
பண்பு வேறென அறிக.