மெய்ப்பாட்டியல்
எ - டு :

....... ....... நெஞ்சே உறழ்ந்திவனைப் 

பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் 

என்றடி சேர்தலுமுண்டு 

(கலி-88)
 

இது    தலைவி   தலைவன்   பரத்தைமையுணர்ந்தும்  "புறஞ்  சாய்த்துக்
காண்டைப்பாய்  நெஞ்சே" என்பதனான்  அதனை  நிறையாகக்  கொண்டு
அருளினமை கண்டு கொள்க.
 

வேம்பின் பைங்காய்என் தோழி தரினே 

தேம்பூங் கட்டி என்றனிர் 

(குறு-196)
 

என்பது    தலைவன்    தலைவியின்    குறையை  நிறையாகக் கொண்ட
மனமாட்சியைப் புலப்படுத்தும்.
 

9.  உணர்வாவது :   ஒருவர்   ஒருவர்   தம்   உள்ளக்   குறிப்பை
அறிந்தொழுகும் நுண்ணறிவு.
 

எ - டு :

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் 

சொற்கள் என்னபயனுமில என்பதனாற் கண்டு கொள்க.
 

10. திருவாவது :    தெய்வத்தன்மை.      அஃதாவது     கண்டாராற் போற்றப்பெறும் தெய்வப் பொலிவு. திருத்தகவிற்றாயதோர் உள்ள  நிகழ்ச்சி
என   அவர்   கொள்கைக்கேற்பப் பொருள் கூறுவார் பேராசிரியர். அஃது
ஒப்புமைப் பண்பாதற்கு ஏலாமையறிக.
 

எ - டு :

அஞ்சுடர்நீள் வாண்முகத்து ஆயிழையும், மாறிலா 

வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண்-டஞ்சி 

ஒருசுடரு மின்றி உலகு பாழாக 

இருசுடரும் போந்தவென் றார் 

(திணைமாலை-71)
 

இதன்கண்       தலைவியையும்      தலைவனையும்    தெய்வத்தன்மை
புலப்படக்கண்டோர் கூறி மகிழ்ந்தவா றறிந்து கொள்க. உரு வடிவழகு; திரு
வியந்துணரும் தெய்விகப் பொலிவு.
 

இனி, அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கிலும் இழிசினர் கண்ணும் ஈண்டுக் கூறப்பெற்ற ஒப்புமைகள்  ஒருங்கு நேராமையான்  அவர்தம் காம
ஒழுக்கம்  அகனைந்திணைக்  குரித்தாகாது  பெருந்திணையின்  பாற்பட்டு
அடங்குமென அறிக.
 

சூ. 275 :

நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி 

வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை 

இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை 

என்றிவை இன்மை என்மனார் புலவர்

(26)