களவியல்1

பொருளதிகாரம்
 

மூன்றாவது களவியல்
 

பாயிரவுரை : தொல்காப்பியங்கூறும்  அகப்பொருள்  ஒழுகலாறு பற்றிய
இலக்கண   மரபுகள்யாவும்    தமிழ்மொழியில்   எழுவகைச்    செய்யுள்
இலக்கியங்களைப்    படைத்தற்கு   அடிப்படையாகத்      தொன்னூலார்
வகுத்துரைத்த இலக்கியக் கோட்பாடுகளேயன்றி அவை தமிழின   மக்களின் வாழ்க்கை   வரலாற்றுச்   சுருக்கமல்ல  என்பதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.
 

இலக்கியம்  என்பது,   அறம்   முதலாய   மும்முதற்   பொருள்களை
மேற்கொண்டு  மக்கள்    வாழ்வாங்கு  வாழ இயற்கையும் செயற்கையுமாக
அவர்கள் கைக்கொண்டொழுகும் முறைகளைக் கூர்ந்து நோக்கி அவர்கட்கு ஆக்கந்தருவனவற்றைத்   தேர்ந்து    அல்லனவற்றை   நீக்கி    இன்பம் பயப்பனவாகிய    கலைவளத்தைச்   சேர்த்துப்   பொதுவும்   சிறப்புமாக நல்லிசைப்புலவோரான்  யாத்துரைக்கப்படுவதொன்றாகலின்   இவ்வாசிரியர் அம்மரபுகளை
 

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

(அகத்திணை)
 

என  விளங்கக்   கூறி அது   பற்றிய இலக்கண முறைமைகளை தொகுத்து
ஓதியுள்ளார்.
 

செய்யுள்   உறுப்புக்கள்  முப்பத்து நான்கு என வகுத்துக் கூறுவதனான்
அவை  யாவும்  எல்லாச்    செய்யுட்கண்ணும்   அமைந்து வருமென்றோ
அமைந்துள்ளன   என்றோ  கருதுதல் எவ்வாறு பொருந்தாதோ அவ்வாறே
அகத்திணை  மரபுகளாகக் கூறப்பெறும் இலக்கணங்கள் யாவும் அகத்திணை
மாந்தராக வரும் யாவர்க்கும் உரியவெனக்  கோடலும்  பொருந்தாததாகும். செய்யுளியல் விதிகளுள்   எழுவகைச்   செய்யுட்கும் பொதுவானவற்றையும் வெண்பா முதலிய   பாக்களுக்குச்  சிறப்பானவற்றையும்    பகுத்துணர்ந்து கொள்ளுமாறு   போலவும்   கலிப்பா   உறுப்புக்களுள்   இன்ன  இன்ன உறுப்புக்களான்   வருவன   இன்ன    இன்ன  கலிப்பா   என  அறிந்து கொள்ளுமாறு போலவும் அகத்திணை ஒழுகலாறு  பற்றிய    மரபுகளையும் தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி முதலிய அகத்திணை மாந்தர் மரபுகளையும் இயற்கைப் புணர்ச்சி    முதலாய  இலக்கணங்களையும் ஓதல் முதலாய பிரிவுகளையும்,  மெய்ப்பாட்டுப்  பொருள்களையும் பகுத்துணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.