மெய்ப்பாட்டியல்

4. புறமொழியாவது : தமது  உள்ளத்தும்  இல்லத்தும் நிகழ்வனவற்றைப்
புறத்தார்க்குப்   புலனாமாறு   பேசுதல். இது   குலனுடையார்க்கு ஒவ்வாத
செயலாகலின் விலக்கப்பட்டது.
 

இதற்குப் புறங்கூறுதல் எனப்பொருள் காண்பார். அஃது  எல்லோர்க்கும்
பொதுவாக      விலக்கப்பட்டுள்ள       குணமாதலின்     காதலர்க்குச்
சிறந்துரிமையாகாமை உணர்க.
 

5. வன்சொல்லாவது : குடிமைக்கொவ்வாத  கடுஞ்சொற்களைக் கிளத்தல்.
அஃது அன்பினைத் தேய்க்கும் அரமாதலின் விலக்கப்பட்டது.
 

இன்சொல்,   வாய்ச்சொல்   என்பவை  தலைமகற்கும்,   மென்மொழி,
சின்மொழி, பணிமொழி, கனிமொழி,  தேமொழி  என்பவை  தலைமகட்கும்
உரியவாகச் சான்றோர் ஓதுதலையறிக. இவற்றிற்கு  மாறுபட்டது  வன்சொல்
என்க.
 

6. பொச்சாப்பாவது : காதற்காமச் சிறப்பிற்குரிய, சொற்செயல்களின்பால்
கடைப்பிடியின்றி   நெகிழ்ந்து  விடுதல். இது  நிறுத்த  காமவாயிற்கு ஊறு
செய்வதாகலின்   விலக்கப்பட்டது.  பொச்சாப்பு  எனினும் மறவி எனினும்
ஒக்கும்.
 

7. மடிமமையாவது :  கடப்பாடாவனவற்றைக்   காலத்தொடு  புரியாமல்,
சோம்பியிருத்தல். இது காமச்செறிவிற்கு ஒவ்வாமையான் விலக்கப்பட்டது.
 

8. குடிமையின்புறலாவது :   தத்தம்  குடிமைச்  சிறப்பினை  உயர்வாக
எண்ணிச் செருக்கிக்  களித்தல்.   இது   மற்றவர்   குடிமையை   இகழும்
குறிப்பாக அமைதலின் காதலுணர்வைச் சிதைக்கும் என விலக்கப்பட்டது.
 

இதனை  இரண்டாக  எண்ணுவர் பேராசிரியர். இரண்டாயின் இரண்டும்
வேண்டப்படும்   பொருளாதலன்றி   விலக்கப்பாட்டிற்கு   ஒவ்வாமையறிக.
இன்புறல் என்பதற்கு அவர்  கூறும் பொருள்   உடற்கூறு   பற்றியதன்றிக்
குணம் பற்றியதாகாமையும் அறிக.
 

9. ஏழைமை மறப்பாவது : பணிவுடைமையை மறந்தொழுகுதல். ஈண்டுப்
பணிவென்பது  அன்பிற்  கெளியராதல், மதிக்கத் தக்கார் மாட்டு மேலாளர்
மாட்டும் தம்மை  அடியேன்,  ஏழையேன், சிறியேன் எனப் பண்புடையோர்
கூறிக் கொண்டொழுகும் வழக்கினைக் கண்டு கொள்க.