உவமவியல்343

இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் 

உவம மருங்கிற் றோன்று மென்ப  

(உவம-36)
 

என்றும்   ஆசிரியர் கூறுமாற்றான் அறியலாம். அவ்வாற்றான் அகத்திணை
மாந்தருள் உவமங் கூறுதற்குரியாரையும் அவர் கூறத்தகும் முறைமையையும்
இவ்வுவமவியலுள் விளங்க விதிப்பாராயினார்.
 

இனி,   இவ்வியலுள்   அகத்திற்கும்  புறத்திற்கும்  பொதுவாக நிகழும்
ஏனையுவமத்திற்குரிய இலக்கணங்களை முதற்கண்  கூறி,  அகத்திணைக்குச்
சிறப்பாக  வரும்  உவம  இலக்கணங்களையும்   உவமங்   கூறுவதற்குரிய
மாந்தரையும் அவர்  கூறும் முறைமையையும்  பின் கிளந்துகூறி  இறுதியாக
உவமம் பற்றிய  சில  பொதுவியல்புகளையும்   புறனடையையும் தொகுத்து
ஓதுகின்றார்.
 

உவமவியல் : திணையுணர்  வகையாகிய உவமத்தின் இலக்கணங்களைத்
தொகுத்துக் கூறலின் இஃது உவமவியல் என்னும் பெயர்த்தாயிற்று.
 

உவமமாவது ஒருவர் ஒரு பொருளைத் தெளிவாகப்  புலப்படுத்தக் கருத
அப்பொருளின்  தன்மையை  நன்கு   பொருந்தியுள்ளதாகத்   தாம் கருதி
மேற்கோளாகக் கொள்ளும்  பொருளாம். இயல், என்பது இலக்கணத்தையும்
படலத்தையும் ஒருங்குணர்த்தி நின்றது.
 

சூ. 277 :

வினைபயன் மெய்உரு என்ற நான்கே 

வகைபெற வந்த உவமத் தோற்றம் 

(1)
 

க - து :
 

உவமத்தின்   வகையும்   தொகையும்   கூறுமுகத்தான்  அது
வெளிப்பட்டுத் தோன்றுமாறு கூறுகின்றது.
 

பொருள் :வகை   பெறுதலான்   வந்த   உவமத்தின்  தோற்றமாவது
வினையும் பயனும் மெய்யும் உருவும்  என்று   சொல்லப்பட்ட   நான்காம்.
ஏகாரம்   தேற்றம்.  என்றது,  உவமத்தின்  வெளிப்பாடு  பொதுவகையான்
இந்நான்கு வகைப்படும் என்றவாறு.
 

வினையாவது : ஒருவினைமுதலின்  தெரிநிலையும்  குறிப்புமாக நிகழும்
தொழிற்பாடு   அல்லது   செயற்பாடு.   பயனாவது :   ஒருவினைமுதலின்
செயற்பாடு   காரணமாக  எய்தும்   பயன்பாடு.   மெய்யாவது : சினையும்
முதலுமாக அறியப்படும்  ஒரு   பொருளின்   வடிவு   அல்லது   பிழம்பு. உருவாவது : ஒரு பொருளின்  வண்ணமும் குணமும்  சுவையும்  அளவும்
பிறவுமாகிய பண்புகள்.
 

வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின்என்று 

அன்ன பிறவும் ...... ...... ....... பண்பு

(சொல்-416)