உவமவியல்345

என்பது மங்குல் மாமழை விசும்புதோலுரிவது  போல  இயங்கி  என்றவாறு.
"கொன்றன்ன  இன்னா  செயினும்"  என்பது கொன்றால் எய்தும் துயரன்ன
இன்னா என்றவாறு. பிறவும் இவ்வாறு வகையுற்று வருமாற்றினை  யெல்லாம் ஓர்ந்து கொள்க.
 

சூ. 278 :

விரவுயும் வரூஉம் மரபின என்ப
(2)
 

க - து :

மேற்கூறிய நான்கும் பற்றியதோர் இயல்பு கூறுகின்றது.
 

பொருள் :வினை,  முதலாக மேற்கூறிய உவமப் பொருளின் தோற்றம்
தனித்தனி வருதலேயன்றி  ஒரு பொருளின்கண் இரண்டு முதலாக விரவியும்
வரும் இலக்கணத்தன என்று கூறுவர் புலவர்.
 

விரவுதற்   கொத்த   பொருள்   உவமமாக  வருமிடத்தன்றி யாண்டும் எல்லாம் விரவிவாரா என்பது விளங்க 'விரவியும்'  என்றார்.  உம்மையான்
அவை தனித்தனி வருதலே பெரும்பான்மை என்பது புலனாம்.
 

எ - டு :

"செவ்வா னன்ன மேனி அவ்வான் 

இலங்கு பிறையன்ன விலங்குவால் வையெயிறு" 
 

இதன்கண் 'செவ்வானன்ன  மேனி' என்பது வண்ணமாகிய உருப்பற்றித்
தனித்து   வந்தது.  'விலங்குவால்வையெயிறு'  என்பது   வடிவும் உருவும்
பற்றி விரவி வந்தது. "காந்தள் அணிமலர்  நறுந்தா தூதும் தும்பி  கையாடு
வட்டிற் றோன்றும்" (அகம்-108) என்பது வினையும், மெய்யும் உருவும் பற்றி
விரவி வந்தது.
 

"மரபின"   என்றதனான்   ஒரு  பொருளை  விளக்கப் பல உவமங்கள்
வருதலும் ஒன்றனது தன்மை பிறிதொன்றின்கண்  விரவி  வருதலும் பிறவும்
கொள்ளப்படும்.
 

எ - டு :

"மாமலை யணைந்த கொண்மூப் போலவும் 

தாய்முலை தழுவிய குழவி போலவும் 

தேறுநீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கும்" எனவும்

"ஆய்தூவி அனமென அணிமயிற் பெடையெனத் 

தூதுணம் புறவெனத் துதைந்தநின் எழில்நலம்" 
 

எனவும்   ஒன்றற்குப்  பல  உவமம்  வந்தன.  இவற்றை  நிரல்பட வந்த
உவமத் தோற்றம் என்பார். பின்னர்த்.
 

"தேன்   போலும்  இனியமொழி"  என்பது நாவிற்குரிய சுவை செவிக்கு
ஏற்றிக் கூறப்பட்டது. பிறவும்   இவ்வாறு  வருவனவற்றை   ஓர்ந்துணர்ந்து
கொள்க.