மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. ஒவ்வொரு இயலையும் நன்கு ஆராய்ந்து பேரறிஞர் திரு. வே. கோபாலையர் அவர்கள் தம் கருத்துக்களை விரிவாகக் கூறியுள்ளார். பொருளதிகாரம் தமிழ் மொழிக்கே உரியதொரு சிறப்பான கூறாகும். அதற்குப் பெரும்பாலும் மனு முதலிய வடமொழிக் கோட்பாடுகளைக் கருத்திற் கொண்டு பழைய உரையாசிரியர்கள் பொருள் செய்துள்ளார்கள் என்பது இக்காண்டிகை உரையாசிரியரின் கருத்து. எனவே பல நூற்பாக்களுக்குப் புதிய உரைகூறி அதற்குச் சங்க இலக்கியங்களிலிருந்தே மேற்கோள்களைக் காட்டி விளக்கியிருப்பது பாராட்டத்தக்கது. இப்புதிய உரையுள் சிலவற்றிற்கு அறிஞர்களுக்குள் கருத்து வேறுபாடு தோன்றலாம். எனினும் பாவலரேறு அவர்களின் நுட்பமான பல விளக்கங்கள் இலக்கிய இலக்கண ஆராய்ச்சி அறிஞர்களின் சிந்தனையில் ஒரு திருப்பத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. விரைந்து இதன் மூன்றாம் பகுதியும் வெளிவரவும் - இவற்றைத் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுடைய அன்புடையார் யாவரும் பயின்று பயன்பெறவும் வேண்டுகிறேன். இவ் உரையாசிரியர் பல்லாண்டுகள் உடல் நலத்தோடும் பிற வளத்தோடும் வாழ்ந்து தமிழன்னைக்குத் தொண்டாற்ற வேண்டுமென்று விரும்பி இறையருளை வேண்டி வாழ்த்துகின்றேன். வாழ்க! |