இதனை "இம்மை போலக் காட்டி யும்மை |
இடையில் காட்சி நின்னொடு |
உடனுறை வாக்குக உயர்ந்த பாலே" |
(புற-236) |
எனவரும் கபிலர் கூற்றானறிக. ஒப்புமையாவது, மெய்ப்பாட்டியலுள் கூறப்படும். |
"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு |
உருவு நிறுத்த காம வாயில் |
நிறையே அருளே உணர்வொடு திருவென |
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே" |
(மெய்-26) |
என்னும் பத்துவகை ஒப்புமைகளையாம். தலைவன் மிகுதல் குலத்தானும் அகவையானும் மிக்கிருத்தல் - தலைவி உருவான் மிகுதல் சிறுபான்மை தலைவன் கூற்றின்கண்வரும். |
இனி உரையாசிரியன்மார், ஒன்றி என்பதனை உயர்ந்தபால் என்பதற்கு அடையாகக் கொண்டு பொருள் கூறுவர். ஒன்றே வேறே என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் நூல் நெறிக்கு ஒவ்வுமாறில்லை. |
இது அகத்திணையியலுள் "கலந்த பொழுதும் காட்சியு மன்ன" (18) எனச் சார்பு உரிப்பொருளாகக் கூறப்பட்டவற்றுள் ஒரு கூறாகிய 'காட்சி' யாகும். |
சூ. 95 : | சிறந்துழி ஐயம் சிறந்த தென்ப |
| இழிந்துழி இழிபே சுட்ட லான. |
| (3) |
க - து : | 'ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப' என மேற்கூறிய காட்சிக்கண் நிகழும் உணர்வும், அவ்வுணர்விற்குரிய காரணமும் பற்றிக் கூறுகின்றது. |
பொருள்: தலைவன் தலைவிக்குரிய ஒப்புமைப் பகுதிகளுள் கட்புலனாகும் உருவானும் திருவானும் தலைமகள் சிறந்து தோன்றுமிடத்துத் தலைவன் வேட்கையுற்று வியத்தற்குக் காரணமாகிய ஐயம் தோன்றுதல் சிறப்பாகும். அவற்றான் தலைவி சிறவாவிடத்து அக்குறைபாடே உள்ளத்தில் நிகழுமாதலின், எனக் கூறுவர் நூலோர். |
களவிற்குரிய சிறந்த மரபினவாகப் பின்னர்க் கூறப்படும் செயல்-உணர்வுகளுள் முதலாவதாகிய 'வேட்கை' என்பது காட்சிப் பொலிவு காரணமாகத் தோன்றுவதாகலின் தலைவி உருவானும் திருவானும் சிறந்து தோன்ற வேண்டுமென்பது நூலோர் கொள்கை என்பது விளங்க 'என்ப' என்றார். |