இதற்கு “ஒரு நிலத்து இரண்டுரிப்பொருள், அதாவது இரண்டொழுக்கம் தம்முண் மயங்குதலன்றி, இரண்டு நிலம் ஒரோவொழுக்கத்தின்கண் மயங்குதலில்லை” என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மேலும், “உரிப்பொருள் மயக்குறுதல் என்னாது, திணை மயக்குறுதலுமென்றார், ஓருரிப்பொருளோடு ஓருரிப்பொருள் மயங்குதலும். . . . . இவ்வாறே கால மயங்குதலும், கருப்பொருள் மயங்குதலும் பெறுமென்றற்கு” எனச் சிறப்புக் குறிப்பும் கூட்டி விரித்தார். இதனால் ஒரு நிலத்தொருகாலத்து ஒன்றின் மிக்க பலதிணைகள் மயங்குமென்பது கருத்தாயின், அது கூடாமைதேற்றம். அன்றி ஒருதிணை பல நிலத்தும் மயங்கும் இயல்பையே இவ்வாறு கூறினர் எனின், அதுமிகையாவதோடு வேறுபாடில்லாத ஒரு மாறுபாட்டைத் தானே படைத்து மயங்குவதுமாகும். ஒவ்வொரு நிலத்தும் அதற்குரிய வல்லாப் பிறவொழுக்கங்கள் நிகழ்தலையும் என்பதனாலேயே, ஒவ்வோரொழுக்கத்திற்கும் அதற்குரிய நிலமேயன்றிப் பிற நிலங்களையுந் தொடர்பு படுத்திக் கூறுதல் அமைவுடைத்தென்பது தெளியப்படும். ஒரு நிலத்துப் பல வொழுக்கம் நிகழும் என்றபின், பல நிலத்து ஓரொழுக்கம் நிகழும் (அதாவது ஒவ்வோ ரொழுக்கத்தோடும் பல நிலத்தொடர்பு அமையும்) என்பதை விலக்குமாறில்லை. எனவே நச்சினார்க்கினியர் கூறுவதே ஈண்டுக் கருத்தாயின். ‘திணைமயக்குறுதலுங்கடி நிலையிலவே’ என்ற அளவே அக்கருத்தை விளக்கப் போதியதாகும்; ‘நிலனொருங் மயங்குதலின்றி’ எனக்கூட்டியுரைப்பது பொருட் பொருத்தமின்றி முரண்பாடும் விளைத்து மயங்கவைக்கும். இனி. ஒருப்பட்ட தலைமக்களுள் ஓரோழுக்கம் பல நிலங்களில் நிகழ்வது ஒரு காலத்தமையாது என்று கூறி, நச்சினார்க்கினியர் உரைக்கு அமைவு காட்டுவதும் பொருந்தாது. ஒரே காலத்தும் ஒரு நிலத்தும் பலவொழுக்கம் ஒருங்கு நிகழ்தலும், ஒருப்பட்ட ஒரே தலைமக்களுள் ஓரொழுக்கம் ஒரு காலத்துப் பலவிடத்து நிகழ்தலும் கூடாமை வெளிப்படை அதனாலும் அது பொருளன்மை யறிக. |