இனி, இவ்வாறு கொள்ளாமல், உரிப்பொருளல்லாத கருப்பொருளும் முதற்பொருளும் பிறதிணையோடு சேரும் என்று இளம்பூரணர் பொருள் கொள்வதும் பொருந்தாது. ஏனெனில் திணைமயக்குறுதலும் என்ற சூத்திரத்தால் முதற்பொருள் மயக்கமும் எந்நில மருங்கிற் பூவும்புள்ளும்’ என்பதால் கருப்பொருள்களின் மயக்கமும் முன் தனி வேறு சூத்திரங்களாற் கூறியிருத்தலின், அவற்றையே இச்சூத்திரத்திலும் தொல்காப்பியர் கூறினாரென்பது கூறியது கூறல் என்னுங் குற்றத்திற்கு அவரையாளாக்கும். |
“உரிப்பொருள் என்றோதிய ஐந்திணையுமல்லாதகைக்கிளை பெருந்திணையும் நால்வகை நிலத்தும் மயங்கவும் பெறும்” என்னும் நச்சினார்க்கினியர் உரையும் அமைவுடைத்தன்று. கைக்கிளை பெருந்திணைகளுக்கு நிலம் பொழுதுகளில் எதுவுமே தனியுரிமை கூறாததால், விலக்கில்லா நிலம்பொழுதுகளில் அவை வந்து மயங்குமெனச் சுட்டுதல் மிகையாகும். அன்றியும் மேல் இரண்டாஞ் சூத்திர முதல் கீழ் 42-ஆம் சூத்திரமுடிய நிரலே நடுவணைந் திணைகளின் இயல்புகளையே விளக்கிப் பிறகு 43முதல் 49 வரையுள்ள சூத்திரங்களில் சில பொதுவியல்புகள் கூறி, அவற்றின்பின் இவ்வியலிறுதியில் 50, 51-ஆம் சூத்திரங்களில் கைக்கிளை பெருந்திணைகளை விளக்கி முடிக்கும் இந்நூலார் ஈண்டு அன்பினைந்திணையின் இயல்புகளுக்கிடையே இன்றியமையாத் தொடர்பு எதுவுமின்றி இறுதியிற் கூறும் கைக்கிளை பெருந்திணைகளையிழந்து அவற்றின் இலக்கணம் கூறுமுன் மயக்கங் கூறினாரெனக் கொள்ளுதல் எவ்வாற்றானுஞ் சாலாமையறிக. |
ஐந்திணையல்லாப் பிற உரிப்பொருள் பலநிலத்து மயங்குதற்குச் செய்யுள்:- |
கொண்டுதலைக்கழிதல் அத்தகைய பிற உரிப்பொருளாதலுண்டென அடுத்த பின் சூத்திரம் கூறுகிறது. அவ்வுரிப்பொருள் புணர்தற்குரிய குறிஞ்சி நிலத்தில் மயங்குவதாகக் கீழ்வரும் பழம்பாட்டுக் கூறுதல் காண்க. |
1. “நினையாய், வாழி, தோழி!” எனும் பூதந்தேவனார் குறும்பாட்டில் |