பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.13

‘நிலம்’  எனவே,  நிலத்திற்குக்  காரணமாகிய  நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும்,  தீக்குக் காரணமாகிய
காற்றும் காற்றிற்குக் காரணமாகிய ஆகாயமும் பெறுதும்.3
  

காலமாவது  -  மாத்திரை  முதலாக,  நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம்,  திங்கள், இருது, அயநம்,
ஆண்டு உகம் எனப் பலவகைப்படும்.
  

கருப்பொருளாவது     இடத்தினும்  காலத்தினும்   தோற்றும்,  பொருள்.  அது, தேவர் மக்கள் விலங்கு
முதலாயினவும்,  உணவு  செயல் முதலாயினவும்,  பறை யாழ்  முதலாயினவும்,  இன்னவான  பிறவும் ஆகிப்
பல வகைப்படும்.
  

“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பெறவும் கருஎன மொழிப.”

(அகத் - 20)
 

என்றா ராகலின்.
  

உரிப்பொருளாவது, மக்கட்கு உரிய பொருள்4. அஃது அகம், புறம் என இருவகைப்படும்.
  

அகமாவது   புணர்தல்,  பிரிதல்;   இருத்தல்,  இரங்கல்,   ஊடல்  எனவும்,  கைக்கிளை  பெருந்திணை
எனவும் எழு வகைப்படும்.
  

“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் தினைக்குரிப் பொருளே”

(அகத் - 16)
 

எனவும்,


3. நிலம்  முதற்பொருள்  என்றால்  நீர்  முதலிய  நான்கும்  எதில்  அடங்கும்  எனின்  நிலத்திலேயே
அடங்கும்  என்பது கருத்து. இந்நான்கும் பொதுவாகக் கூறப்படும் போதே நிலத்தில் அடங்கும் கடல்நீர்
யாற்றுநீர்  அருவி நீர் எனினும் வாடை, கொண்டல் முதலியவாகக் காற்று கூறப்படினும் பாலை நிலத்தீக்
கூறப்படினும் அவ்வற்றுக்குரிய நிலக்கருப் பொருளாக அமையும்.

4. மக்கட்குரிய பொருள் என்றது மக்கட்குரிய ஒழுக்கத்தை.