பக்கம் எண் :

4தொல்காப்பியம் - உரைவளம்

“காமம் சாலா இளமை யோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே.”
  

(அகத்-53)
  

எனவும்.
  

“ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.”

(அகத் - 54)
  

எனவும் ஓதினாராகலின்.
  

அஃதேல்,    கைக்கிளை  பெருந்திணை  என்பனவற்றை  உரிப்பொருள் என, ஓதியது யாதினால் எனின்,
எடுத்துக்கொண்ட கண்ணே5 ‘கைக்கிளை  முதலாப்  பெருந்திணை  இறுவாய்’  என ஓதி அவற்றுள் நடுவண்
ஐந்திணைக்குரியன  இவை எனப்  புணர்தல்  முதலாக  வகுக்கப்படுதலின்,   முன்வகுக்கப்படாத கைக்கிளை
பெருந்திணையும் உரிப் பொருளாம் என்றுணர்க6.
  

புறமாவது,     நிரை  கோடற்பகுதியும்,  பகைவயிற் சேறலும் எயில் வளைத்தலும்,  இருபெரு வேந்தரும்
ஒரு  களத்துப்  பொருதலும்,  வென்றி  வகையும், நிலையாமை  வகையும், புகழ்ச்சி   வகையும்,  என  ஏழு
வகைப்படும். அஃதேல் புறப்பொருளை உரிப்பொருள் என ஓதிற்றிலரால் எனின்,
  

“வெட்சி தானே குறிஞ்சியது புறனே”  (புறத் -1) எனவும் பிறவும் இவ்வாறு மாட்டேறு பெற ஓதலின்,
அவையும் உரிப்பொருள் ஆம் என்க. அகம் புறம் என்பன காரணப்பெயர்.


5. எடுத்துக் கோடற் கண்ணே என்றிருத்தல் வேண்டும். எடுத்துக் கோடற்கண் - தொடக்கத்தில்.

6. நடுவண்    ஐந்திணைகளுக்குப்     புணர்தல்    முதலாக   உரிப்பொருள்   கூறலால்   கைக்கிளை
பெருந்திணைகளுக்கும்  உரிப்பொருள்  உண்டெனக்  கோடல்  வேண்டும்.  கைக்கிளை  பெருந்திணை
என்பனவே உரிப்பொருளாம்.