இங்குக் ‘கலந்தபொழு’ தென்பது பின் களவியல் இரண்டாஞ் சூத்திரம் கூறும் தலைமக்களின் தலையெதிர்ப்பாட்டையும், ‘காட்சி’ என்பது அக்களவில் ஐந்தாஞ் சூத்திரம் கூறும் ‘அறிவுடம் படுத்தற்கு’க் குறிப்பு நாடும் நோக்கத்தையும் முறையே குறிக்கும். கலத்தல் என்பது தலைப்படுதல் என்ற பொருளதாகும் ‘ஒருமூவேங்கலந்த காலை’ என்னுங் கம்பரடியும், ‘கலந்த போர் செய்தாரோர் சிலர்’ என்ற கந்தபுராண அடியுங்காண்க. கலப்பும் என்னாது கலந்த பொழுதும் என்றது முதலெதிர்ப்படுங் காலத்து நிகழும் காட்சி, ஐயம், துணிவு முதலிய பலவும் அடங்குதற் பொருட்டு இச்சூத்திரத்தில் காட்சியென்பது முதலிற் கிழவனுங் கிழத்தியுந் தலைப்பட்டுக் காண்பதன்று; அது கலந்தபொழுது என்பதில் அடங்கும், எதிர்ப்பட்ட தலைமக்களிடை அவர் “அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை” நாடும் நோக்கத்தையே ஈண்டுக் காட்சியென்றார். பின் களவியலில் விளக்கப்படு மிவையிரண்டும் புணர்தல் முதலிய ஐந்திணைகளுள் எவையு மாகாவெனினும், அகத்துறைப் பாட்டுகளுள் இவையும் உரிப்பொருள்களாக ஆட்சி பெறுவதால் ஐந்திணைகளுள் அடங்காத உரிப்பொருள் உண்மை கூறுமிவ்விடத்திலிவை இயைபு பற்றிக் குறிக்கப்பட்டன. |