மென்பது விளங்கக் கருப்பொருளியல் இறுதியிற் கூறுகின்றார். இவ் அளவு முறையான் வைப்பு முறையும் அமைகின்றது. முதற்பொருள இரண்டே வகைகளுள் அடங்குவதாகலின் முதலில் வைக்கப்பட்டது உரிப்பொருள்கள் அகவொழுக்கங்களுள் சிலவாக ஐந்து வகைகளில் அடங்குதலால் அவற்றை முதற்பொருளின் பின்னர்க்கூறி, அவ்விருவகை யளவானும் அடங்காமல் பலபடவிரியும் கருப்பொருள்களை அவ்விரண்டின் பின் அமைத்துக் கூறினார். |
சிவலிங்கனார் |
முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின் இயல்பு என மொழிப இயல்புணர்ந் தோரே |
என்னும் சூத்திரத்தில் முதற்பொருள் என்பது நிலமும் பொழுதுமாகிய இரண்டின் இயல்புகளையுடையது என்பது பெறப்படும். அதில் அவ்விரண்டும் உள்ளதே முதற்பொருள் எனப்படும் என்பது பெறப்படுகின்றது. ஒரு பாடலை நோக்கும்போது அதில் நிலமும் பொழுதும் ஆகிய இரண்டும் இருந்தால் அது கண்டு அப்பாடல் இன்ன திணை என வரையறுக்கலாம் நிலம் மட்டுமோ பொழுது மட்டுமோ அமைந்த பாடல் முதற்பொருளால் திணை கூறப்படுமோ படாதோ என்ற ஐயத்தை இச்சூத்திரம் அகற்றுகின்றது. |
முதல் எனப்படுவது மேலே (4) கூறப்பட்ட இரண்டு வகையினையுடையது என்று கூறும் இச்சூத்திரத்தால் நிலமும் பொழுதும் கூறப்பட்ட பாடலேயன்றி நிலம் மட்டும் கூறப்படும் பாடல் நிலத்தால் திணைகூறப்படும் வகையிலும் பொழுது மட்டும் கூறப்படும்பாடல் பொழுதால் திணை கூறப்படும் வகையிலும் அமைத்தல் வேண்டும். எனவே முதற்பொருள் என்பது நிலவகை முதற்பொருளும் பொழுது வகை முதற்பொருளும் என இருவகைப்படும் என்க. நிலமும் பொழுதும் கூறப்படும் பாடல் இருவகை முதற்பொருள் என்க. |
எனவே ‘முதல் எனப்படுவது.........இயல்புணர்ந்தோரே’ (4) என்னும் சூத்திரத்தால் முதற்பொருளாவது நிலமும்பொழுதும் என்னும் இரண்டும் உடையது என்பதும், இச்சூத்திரத்தால் முதற்பொருள் நிலவகை பொழுது வகை என இருவகைப்படும் என்பதும் கூறப்பட்டன என்க. இவ்வாறு கொள்ளாக் |