பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.17

அதன்பின்     வடிவும்  தொழிலும்  பண்பும்  பயனும்  பற்றி  உவமிக்கப்படும்  உவம  இயல்   உணர்த்தி,
அதன்பின்,   எல்லாப்   பொருட்கும்   இடமாகிய   செய்யுள்   இயல்   உணர்த்தி,  அதன்பின்,   வழக்கு
இலக்கணமாகிய  மரபு  இயல்  உணர்த்தினார்  என்று  கொள்க.  இவ்வகையினானே  அகத்திணை   இயல்,
புறத்திணைஇயல், களவியல்,  கற்பியல்,  பொருள் இயல்,  மெய்ப்பாட்டுஇயல்,  உவமஇயல், செய்யுள்  இயல்,
மரபு இயல் என ஓத்து ஒன்பதாயின.
  

இவ்வதிகாரத்துள், இம்முதற்கண் ஓத்து அகப்பொருள் இலக்கணம் நுதலிற்று.
  

1. கைக்கிளை ......... என்ப
  

இத்தலைச்   சூத்திரம்    என்நுதலிற்றோ   எனின்,   அகப்பொருள்   இத்துணை  என   வரையறுத்து
உணர்த்துல் நுதலிற்று.
  

(இதன் பொருள்):- கைக்கிளை  முதல்  ஆக  பெருந்திணை   இறுவாய்  (ஆக)  -  கைக்கிளை என்று
சொல்லப்படும்  பொருள்  முதலாகப்  பெருந்திணை  என்று  சொல்லப்படும்  பொருள்  ஈறாக,  எழுதிணை
முற்படக் கிளந்த என்ப ஏழு பொருள்1 முற்படக் கூறப்பட்டன என்று சொல்வர்.
  

முதலா     என்பது  முதலாக  என்னும்  பொருள்பட நின்றது; விகாரம் எனினும் அமையும். இறுவாயாக
என்பதன்கண்  ஆக  என்பது  எஞ்சி  நின்றது.  எழுதிணையும்  முற்படக் கிளந்த எனற்பாலது மொழி மாறி
நின்றது.  கிளந்த என்பது கிளக்கப்பட்டன  என்னும்  பொருள்பட  வந்த  முற்றுச்  சொல். முற்படக் கிளந்த
எழுதிணை  கைக்கிளை  முதலாகப்  பெருந்திணை   இறுதிய   எனினும்   இழுக்காது.   “முற்படக் கிளந்த
என்றமையான்,  அவை  ஏழும்  அகப்பொருள்   என்று   கூறினாருமாம்;  அகம்,  புறம்  எனப் பொருளை
வரையறுத்தல் இவர் கருத்தாகலின்: அன்னதாதல்,
  

“அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்”

(புறத்-1)
 

என்பதனாற் கொள்க.


1. திணை என்பதற்குப் ‘பொருள்’ என இளம்பூரணர் கூற நச்சினார்க்கினியர் ஒழுக்கம் என்றார்.