பாட்டில், பரவர் மகளைத் தலைவியாகவும், பிறிதொரு நிலமகனைத் தலைவனாகவும் அமைத்து அம்மூவனார் கூறியதும் அக்காலத் தமிழ் மரபு அதுவாதலான் என்பது வெளிப்படை. இன்ன பல பழம் பாட்டுகளால் பண்டைத் தமிழகத்தில் நானில மக்களுள் மணமும் உணவும் பிறப்பு நிலை வினைகள் பற்றி வரையப்படாமல் கலந்து கையாளப்பட்டன என்பது தெள்ளத்தெளியக் கொள்ளப்படும் மரபியலில் காணப்பெறும் வருணவகை பற்றிய சூத்திரங்கள் இடைச்செருகல் என்பது பிறாண்டு விளக்கப்படும். |
“யாயும் ஞாயும் யாரா கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி யறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சத் தாங்கலந் தனவே” |
என்னும் குறுந்தொகை 40-ஆம் பாட்டானும் பிறப்பு, தொழில்வகை கருதாமல் ஒத்த அன்பே மணத்திற்குப் போதியது என்னுந் தமிழ் மரபு விளக்கமாகும். |
நானிலத் தமிழ்மக்களுள் தம்முள் வேறுபாடின்றி மணந்து கொள்ளும் பழைய வழக்குண்மை, சாதி வெறியலைக்கும் பிற்காலக் கோவைகளும் பலநில மக்களின் கலப்புமணம் குறித்துத் தமிழ்மரபு வழுவாமல் அகத்துறைகமைத்துக் கூறுவதாலும் வலிபெறுகின்றது. |
“கழைகோடு வில்லியைச் செற்றா தியாகர் கமலைவெற்பின் உழைகோடி சுற்றுங் கிரியெம தூரும தூர்மருதம்; தழைகோடி கொண்டுசமைத்ததெம் மாடை தனித்தனியோர் இழைகோடி பொன்பெறு மேயும தாடை யிறையவரே.” |
(எல்லப்பநயினர் திருவாரூர்க்கோவை. செய்-101) |
இவ்வுண்மையை மறந்து தொல்காப்பியர் நூலின் உரைகாரர் இப்பண்டைத் தமிழிலக்கண (நூற்) சூத்திரத்திற்கு, அவர் கால இயைபற்ற புராணக் கதைகளையும் இயல்வழக்கற்ற ஆரியக் கொள்கைகளையும் புகுத்திப், பொருந்தாப் புத்துரைகள் |