இவ்வாறு, தமிழருள் யாரும் காதற்றலை மக்களாய் அகத்திணைக்கு உரிமைகொள்வர் என்பதைச் சுட்டுதற்காகவே ‘ஆவயின் வரூஉங் கிழவரு முளரே’ என்று இதில் இந்நூலார் அமைவு பெறக்கூறித் தெளியவைத்தார். |
“பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ அன்றே; எம்ம னோரிற் செம்மலு முடைத்தே” என்று |
(நற்றிணை-45) |
‘உணக்கல் வேண்டி யினப்புள்ளோப்பும் புலவு நாறும்’ பரதவர் மகளை கிளவித்தலைவியாகக் கூறும் நற்றிணையடிகளானும் இவ்வுண்மையறிக. |
சிவலிங்கனார் |
முன் சூத்திரத்தில் பாடலுள் பயிலும் பெயர்கள் கூறினார் இச்சூத்திரத்துள் அவை பயிலுமாறு கூறுகின்றார். |
திணைதொறும் மரீஇய திணை நிலைப்பெயர் முல்லைக்கு ஆயர் என்பது: அப்பெயர் முல்லைத் திணைப் பாடலில் ஆளப்படுவதோடு அப்பெயரால்வரும் ஆயர்மகன் (ஆயர் மகள்) என்பது முல்லைத் திணைத்தலை மக்கள் பெயராக ஆளப்படும் என்பது இச்சூத்திரப் பொருளாக இளம்பூரணர் கூறினார் எனவே முல்லை நில மக்கள் பெயர் ஆயர் என்பது பொதுமக்கள் பெயராகவும், அதனால் வரும் ஆயர்மகன் ஆயர்மகள் என்பன உரிப்பொருள் தலைமக்கள் பெயராகவும் பொதுவன் என்னும் நிலப்பெயர் அப்படியே உரிப்பொருள் தலைமக்கள் பெயராகவும் பாடலில் பயின்று வரும் என்பது இளம்பூரணர் கருத்து என்பது புலப்படும். |
இது நச்சினார்க்கினியர் கருத்தும் ஆம்; எனினும் இச்சூத்திரத்துக்குப் பொருள் கூறும் முறையில் மாறுபடுவர். |
ஆயர் வேட்டுவர் என்னும் திணை தொறும் மரீஇய பெயரிலிருந்து திணைநிலைப்பெயர் (உரிப்பொருள் தலைவர் பெயர்) (அதாவது கிளவித்தலைவர் பெயர்) கூறப்படும் என்பர். அதற்கேற்ப அவர் இச்சூத்திரத்தை, |