பக்கம் எண் :

ஏவல் மரபின் ஏனோரும் உரியர் சூ.26209

நச்சினார்க்கினியர்
  

26. ஏவன் மரபின்.......................மன்னர்
  

இது   முன்னர்ப்  ‘பெயரும்  வினையும்’  (20)  என்பதனுள் திணைதொறுமரீஇய பெயருள் திணைநிலைப்
பெயருமெனப்     பகுத்த     இரண்டனுள்     திணைதொறுமரீஇய    பெயருள்    தலைவராதற்குரியாரை
அதிகாரப்பட்டமையிற்கூறி,     அங்ஙனந்     தலைவராதற்குரிமையின்     அடியோரையும்     வினைவல
பாங்கினோரையும்     அதன்பிற்கூறி,     பின்னர்    நின்ற    திணைநிலைப்   பெயராதற்குச்   சிறந்தார்
அறுவகைய1ரெனப் பகுக்கின்றது.
  

இதன் பொருள்:- மரபின் - வேத  நூலுட்  கூறிய இலக்கணத்தானே, ஏவல் ஆகிய நிலைமை யவரும் -
பிறரை   ஏவிக்கொள்ளுந்தொழில்   தமக்குளதாகிய   தன்மையையுடைய   அந்தணர்   அரசர்  வணிகரும்,
அன்னர்   ஆகிய   அவரும்  -  அம்மூவரையும்  போலப்  பிறரை ஏவிக்கொள்ளுந் தன்மையாகிய குறுநில
மன்னரும்    அரசாற்    சிறப்புப்   பெற்றோரும்,   ஏனோரும்  -  நால்வகை  வருணமென்று  எண்ணிய
வகையினால் ஒழிந்துநின்ற வேளாளரும், உரியர் - உரிப்பொருட் டலைவராதற்கு உரியர் என்றவாறு.
  

ஆகிய என்பதனை ஏவலொடும் அன்னரொடுங் கூட்டுக.  

எனவே,     திணைநிலைப்பெயர்  அறுவகையாயிற்று   ‘வேந்து விடு தொழிலிற்................பொருளே’  (637)
என்பதனான்   வேளாளரே   அரசராற்   சிறப்புச்   செய்யப்  பெறுவ ரென்றுணர்க. இனி ‘வில்லும் வேலுங்
களிறு.........முரிய’    (639)    என்பதனான்    ஏனோருஞ்    சிறுபான்மை   சிறப்புப்  பெறுவரென்றுணர்க.
உரிப்பொருட்டலைவர் இவரேயாதலைத்2 தான் மேற் பிரிவிற்குக் கூறுகின்றவாற்றானும் உணர்க.
  


1. அறுவகையர் - அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் குறுநில மன்னர், அரசாற்சிறப்புப் பெற்றோர்.
  

2. உரிப்பொருட்டலைவர்  இவரே  எனக்கூறுவது ஆயர் வேட்டுவர் முதலியவாக முன்னர்க் கூறப்பட்ட
திணைநிலைப் பெயர்களுக்கு மாறுட்டிருத்தல் காண்க.