பக்கம் எண் :

ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன சூ.28219

இளம்பூரணர்
  

28. அவற்றுள்............................மேன
  

இது   மேற்கூறப்பட்டவற்றுள்  ஓதற்கும்  தூது போதற்கும் உரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)     அவற்றுள் -  மேற்கூறப்பட்டவற்றுள்,   ஓதலும் தூதும்-ஓதல் காரணமாகப் பிரியும் பிரிவும்,
தூதாகிப்  பிரியும்  பிரிவும்   உயர்ந்தோர்மேன  -    நால்வகை  வருணத்தினும் உயர்ந்த அந்தணர்க்கும்
அரசர்க்கும் உரிய.
  

இவர்    ஒழுக்கத்தானும்    குணத்தானும்    செல்வத்தானும்    ஏனையரினும்   உயர்புடையராதலின்
“உயர்ந்தோர்‘ என்றார். அரசர்தாம் தூதாகியவாறு வாசுதேவனால்1 உணர்க.
  

“வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லுச் சிலவே யதற்கே.
ஏணியுஞ் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையு மணிகளைந் தனனே.”  

  (புறம்-305)
 

இதனுள் பார்ப்பார் தூதாகியவாறு கண்டுகொள்க.
  

26. நச்சினார்க்கினியர்
  

இது முற்கூறியவற்றுள் அந்தணர் முதலிய மூவர்க்கும் இரண்டு பிரிவு உரித்தென்கிறது.
  

(இ-ள்)  அவற்றுள்  -  அம்மூன்றனுள்;  ஓதலும்  தூதும்  உயர்ந்தோர்  மேன  - ஓதற் பிரிவும் தூதிற்
பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன2 என்றவாறு.


1. வசுதேவன் மகன் வாசுதேவன் - கண்ணன்
2. இளம்பூரணர் உயர்ந்தோராவார் அந்தணர் அரசர் என்ன இவர் வணிகரையும் சேர்த்தார்.