அவ்விரு கூற்றும் தொல்காப்பியர் கருத்தன்மை காட்டும். தமிழகம் முல்லை முதலிய நானிலமாகத் திணைபற்றிப் பகுக்கப்படுமென்று மேலே 2, 5 ஆம் சூத்திரங்களிலும், அந்நானில மக்களும் திணைதொறு மரீஇய திணைநிலப்பெயரொடு அகத்துறைகளில் கிழவராவரென 20, 21 ஆம் சூத்திரங்களிலும் விளக்கியிருப்பதால், ஈண்டு நால்வரென்பது அந்நானில மக்களையே குறிக்கும். அந்நானிலத்தும் அடியோர் முதலிய கீழோரும், வேந்தர் வேந்தரொடு சிவணிய ஏனாதியர் முதலிய மேலோரும் உளராதலை, மேலே 23, 24, 26, 27, 28 ஆம் சூத்திரங்களில் இந்நூலார் விளக்கியுள்ளார். அதனால் இதில் மேலோரென்றும் நால்வரென்றும் குறிக்கப்படுவோர், இவ்வியலில் முன் விளக்கியுள்ள வேந்தரொடு சிவணியோரும் நானிலத் தமிழ் மக்களுமேயாவர் அந்நால்வகைத் தமிழ் மக்களும் வேந்தரொடு சிவணிய மேலோரொப்ப ஓதல் தூது காவல் மேற்கொள்வதும், அதுபற்றிப் பிரிதலும் மரபென்பது இதில் விளக்கப்பட்டது. |
இனி யிவ்வாறன்றி ‘நால்வர்’ என்பது நான்கு வருணத்தார் என்றும், ‘மேலோர்’ என்பது அவருள் இருபிறப்பாளராய மேல்வகுப்பினர் மூவரென்றும் அல்லது அவருள்ளுஞ் சிறந்த பார்ப்பனரென்றும் பொருள் கொள்ளின் மேலோரெனப்படுவார் யாவரேயாயினும் அவரைநீக்கியபின் அவரொழிந்த வருண வகுப்பினர் நால்வராதல் கூடாமை வெளிப்படை, அதுவுமின்றி, ஆரியர் அறநூல்கள் கூறும் பிறப்புரிமைகளுடைய இடையிரு வருணத்தார் என்றும் தமிழகத்து இல்லாமையானும், தொல்காப்பியர் தமிழ் மரபுகளையும் தமிழர் வழக்குகளையுமே தாம் கூறுவதாக வற்புறுத்தவதானும், அவ்வுரை தொல்காப்பியர் கருத்தன்றென்பது தேற்றமாகும். |