பக்கம் எண் :

வேந்துவினை யியற்கை வேந்தன் ஒரீஇய சூ.34247

நச்சினார்க்கினியர்
  

34. “வேந்துவினை..............................உடைத்தே”
  

இது    மலய    மாதவன்1   நிலங்கடந்த   நெடுமுடியண்ண2   லுழை  நரபதியருடன்3   கொணர்ந்த
பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன்றொழில் உரித்தென்கிறது.
  

(இ-ள்)     வேந்து  வினை  இயற்கை  -  முடியுடை   வேந்தர்க்குரிய  தொழிலாகி  இலக்கணங்கள்4,
வேந்தனின்  ஓரீஇய ஏனோர் மருங்கினும் எய்துஇடன் உடைத்து -   அம்முடியுடை   வேந்தரை யொழிந்த
குறுநில மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையது என்றவாறு.
  

அவர்க்குரிய   இலக்கணமாவன,  தன்  பகைவயிற்  றானே  சேறலுந்  தான்  திறைபெற்ற  நாடுகாக்கப்
பிரிதலும் மன்னர் பாங்கிற் பின்னோரெனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளுஞ் சிறப்புமாம்.
  

உதாரணம்:
  

“விலங்கிருஞ் சிமயக் குன்றத் தும்பர்
வேறுபன் மொழிப தேஎ முன்னி
விண்நசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு
புண்மா ணெஃகம் வலவயி னேந்திச்
செலன் மான் புற்ற”.  
  

(அகம் 215)

என்புழி  வேறு பன்மொழிய தேஎந்தைக் கொள்ளக் கருதிப்   போர்த்தொழிலைச் செலுத்தும் உரன்மிக்க
நெஞ்ச மென்றலின், இது குறுநில மன்னன் தன் பகைவயின் நாடு கொள்ளச்   சென்றதாம்;   வேந்தனெனப்
பெயர்  கூறாமையின்.  “பசைபடு பச்சை நெய்தோய்த்து” என்றலிற்றானே  குறுநில  மன்னன்   சென்றதாம்.
ஏனை வந்துழிக் காண்க.                                                               (32)  


1. அகத்தியன்  

2. கண்ணன்  

3. நரபதி-அரசர்  

4. இயற்கை என்பதை இலக்கணங்கள் என்றார்.