மக்களும் எல்லாத்திணைக்கு முரியரென்பதை ‘ஆயர்வேட்டுவர்’ ஏனோர் பாங்கினும் என்னும் 21, 22 ஆம் சூத்திரங்களில் விளக்கினார். அவரைப் போலவே, அடியோர், வினைவலர், ஏவலர், ஏவலரனையவர் ஆகிய கீழோர் நால்வரும் அகத்திணைகளுக்குரிமை கொள்வரென்பது ‘அடியோர் பாங்கினும்’, ஏவன் மரபின் என்னும் 23, 24 ஆம் சூத்திரங்களில் விளக்கப்பட்டது. பிறகு அகத்திணையைந்தனுள் சிறந்த பாலைத்திணையின் வகைகளாம், அவை பற்றிய பிரிவுகளுக்குரியார் வகைகளும், ‘ஓதல் பகையே’ என்னும் 25 ஆம் சூத்திர முதல் ‘பொருள்வயிற் பிரிதலும்', என்னுமிச் சூத்திரம் வரை விளக்கப்பட்டன. அவற்றுள் 25, 26, 29 ஆம் சூத்திரங்கள் நானில மக்களைப் பற்றியும் 27, 28, 30 ஆம் சூத்திரங்கள் வேந்தனையும் வேந்தனோடு பொருந்திய ஏனோரையும் பற்றியும், 31, 32 ஆம் சூத்திரங்கள் வேந்தர் குடியில் வாரா ஏந்தல்களான குறுநில மன்னரைப் பற்றியும் கூறுகின்றன. இதனால் தொல்காப்பியர் காலத் தமிழகத்தில், அகத்திணையொழுக்கம் மேற்கொண்டவர் அடியோர் முதலிய கீழோரும், நானில மக்களும், மூவேந்தரும், வேந்தரைச்சார்ந்து சிறந்த ஏனோரும், வேந்தர் குடிவாரா நாடாட்சி கொண்ட குறுநில மன்னருமாய் அனைவருமடங்குவரென்பது தேற்றம். தமிழ் நாட்டில் முடிவேந்தர் மூவரே யாவர் என்பது “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்” என்னும் தொல்காப்பியர் செய்யுளியற் சூத்திரத்தானும் “போந்தை, வேம்பே ஆரெனவரூஉ மாபெருந்தானையர் மலைந்த பூவும்” என்னும் புறத்திணையியற் சூத்திரத்தானும் பண்டைப்பாட்டுக்களானும், விளக்கமாகும். |