இனி, அவர்காலத் தமிழ் நூல்வழக்கை மேற்கொண்டு அகப்புற வொழுக்கங்களைத் தொல்காப்பியர் முறையை ஒன்றற் கொன்றியைபுடைய அவ்வே ழுதிணைகளிலடக்கி யமைத்தார் அவற்றில் அக வொழுக்கங்களை முறையே கைக்கிளை-முல்லை குறிஞ்சி-பாலை-மருதம்-பெருந்திணை என முறைப்படத் தொகுத்தார். காதல் ஒருவன் பாற் கதிர்த்து, மற்றையோள் மாட்டுப் பருவன்மையாற் பால்விளியுணரப் பான்மையிற் சிறக்கத் தோன்றா நிலையே கைக்கிளை. எனில், இந்நிலை, கன்றிய காதலன் “காமஞ்சாலா இளமையோள் வயின்” - தனக்கேமம் சாலப்பெறானெனினும், தன்னலம் விழையாமல் பழிபடு பிழையொழித்து அவணலம் பேணியொழுமும் காதற்பெற்றியதாகலின். அதனை முதலில் வைத்து, இருபாலும் காதலொத்துக் கனிந்து சிறந்த அன்பினைந் திணைகளை அதன் பின்னமைத்து, அவற்றின் பின் காதல் கண்ணாது கழி காமம்பிறக்கும் பெருந்திணையைப் பிரித்து நிறுத்தி முறைப்படுத்தினார். இவ்வெழுதிணைகளையும் முறையாற்றொகுத்துக் காட்டினரெனினும் விரிக்குங்கால் இலக்கணம் நிறைந்த ஐந்திணைகளையும் தொடர்புடன் பலபட விளக்கித் தம்மியல் கூறுமளவில் அமைவனவான கைக்கிளை பெருந்திணைகளினிலக் கணங்களை முறையே இறுதியிலிரண்டு தனிச் சூத்திரங்களாற்றெளித்து முடிப்பர். |