குறிப்பு:- ஏமமற்ற ஊராயின் தாயர் மனையிறந்து புறஞ் செல்லாராதலின் ‘ஏமப்பேரூர்ச்சேரி’ எனப்பட்டது; ஏமப்பேரூர்ச் சேரியாயின், அதனளவு மகட் பெற்ற நற்றாய் தேடிச் செல்லுதல் அமையும்; நற்றாய் சுரஞ் சென்று தேடுதல் வழக்காறில்லை. செவிலித்தாயர் சுரத்தும்தேடிச் செல்வர். இதுவே பண்டைய ஆன்றோர் செய்யுளிற்கண்ட புலனெறி வழக்கம், சிற்றூராயின் தேடிச் செல்லுதல் வேண்டாவாதலின் சேரியுடைய பேரூரே கூறப்பட்டது தாயாரும்’ எனும் உம்மையால், தாமே செல்லும் தாயர் சிலரேயாவரென்பதும், தேடப்பிற அயலோரை ஏவும் தாய்மாரே பலராவரென்பதும் பெறப்படும். அடுத்து பின் கூறும் “அயலோரோடு சுரம் செல்லும் தாயருமுளரெனச் சுட்டுவதால் இவ்வும்மை எதிரது தழூஉ எச்சமுமாம். |
இனி, சேரியும் சுரத்தும் என ஒருங்கெண்ணி, ‘செல்லுந் தாயரும் உளர்’, எனப் பன்மையாற் கூறுதலால், நற்றாய் மனையிருந்து இரங்குவதன்றி மனையிறந்து புறம்பெயர்தல் இன்றெனக் கொண்டு, செவிலித்தாயரே சேரியும் சுரத்தும் செல்வர் எனப் பொருள் கொள்ளினும் தவறாகாது. நற்றாய் பேரூர்ச்சேரி அளவு தேடிச் செல்லுதற்குச் செய்யுள் வருமாறு: “ஒங்குநிலைத்தாழி மல்கச் சார்த்தி(275) என்னும் அகப்பாட்டில் “வெம்மலை அருஞ்சுரம்...... கண்ணுடையீரே” என வருமடிகள் ஏமப்பேரூர்ச் சேரியில் தேடிச் சென்ற நற்றாய் கூற்றாகும். “கூழை நொச்சி கீழது என் மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலுங் காண்டிரோ” என்பதனால் அப்பேரூர் காவல் மதிலுடையதென்பதும், அந்நகர் மதிற் புறத்தே தன் மகள் விரல் கொண்டு வரித்த வண்டல் காணக் கிடப்பதாய்க் குறித்ததனால் அது நகர்ப்புறச்சேரி என்பதும் விளக்கமாகும். அன்றியும், ‘நம்மிவணொழிய’ என நற்றாய் தன் முன்னிலையோரையும் உளப்படுத்திக் கூறினதால், அவர் தலைமகள் ஊரவராதலும் தன்னைப்போல் அவரையும் தலைமகள் விட்டுச் சென்றாள் எனச்சுட்டுந் தாயினுளக் குறிப்பும் தெளியப்படும் |