குறிப்பு:- இச்சூத்திரத்தில் அகத்திணையேழும் நிரலே கூறப்பெறாமையானும், கிளக்கும் என்னாது கிளந்த என இறந்த கால எச்சம் பெய்த பெற்றிமையானும், இதன் பிறகுள்ள சூத்திர வைப்பு முறையில் கைக்கிளையை முதலாகவும் அதனையடுத்து அன்பினைந் திணையும் இறுதியிற் பெருந்திணையுமாக அமைத்துக் கூறப்பெறாமல், முதற்கண் அன்பினைந்தினை கூறி, அவற்றின் பின் கைக்கிளை பெருந்திணைகள் தொடர்ந்து கூறப்படுவதாலும் ‘முற்படக்கிளந்த வெழுதிணை’ என்பது அமைத்துக் கூறப்பெறாமல், முதற்கண் அன்பினைந்திணை கூறி, அவற்றின் பின் கைக்கிளை பெருந்திணைகள் தொடர்ந்து கூறப்படுவதாலும் ‘முதற்படக்கிளந்த வெழுதிணை’ என்பது அகத்திணையலில் இச்சூத்திரத்தின் பின் அமைத்துக் கூறப்பட்ட முறையைச் சுட்டாதென்பது வெளிப்படை. எனவே ஈண்டு “முற்படக்கிளந்த’, என்பது இடத்தால் முற்படக்கூறும் அமைப்பு முறையோடு பொருந்தாமையால், காலத்தால் முற்படக்கிளந்த வொன்றனையே குறிக்குமென்பது தேற்றமாகும். |
ஆகவே, பொருட்படலத்தின் முதலில், பொருள் அகம் புறமென இருவகைப்படுமென்பதும், அவற்றுள் பின்கூறப்பெறும் புறத்திணை ஏழாதல் போலவே அகத்திணையும் ஏழாமென்பதும் அவ்வகத்திணையும் கைக்கிளை அன்பினைந்திணை பெருந்திணை என ஏழாக வகுக்கப்படுமென்பதும், ஆகிய இவற்றைச் சுட்டிய சில சூத்திரங்கள் அகத்திணையின் முதற்கண் இச்சூத்திரத்திற்கு முன்னே ஆசிரியரால் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறாயின் மட்டும் ‘முற்படக்கிளந்த’ எனுமிச்சூத்திரச் சொற்களுக்குப் பொருளமைதியும், ‘கைக்கிளை முதலா’ எனுந் தொடர்க்குப் பொருளும் அமைவதாகும். இப்பழ நூற்சூத்திரங்கள் சில கடல்கோளாலும் புலம் பெயர்தலாலும் வீழ்ந்து மறைக்கப்பட்டிருத்தல் கூடுமென்பது களவியலுரையாலும்’ “தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப்பழமையால் (ஏடு) பெயர்த்தெழுதுவோர் விழ எழுதினார் போலும்” என்னும் இளம்பூரணர் உரைக் குறிப்பாலும் தெளியப்படும். அவ்வாறு கொள்ளாக்கால் இச்சூத்திரச் சொற்றொடர்கள் பொருந்தும் பொருளமைதி பெறுமாறில்லை. ஆதலாலும் ‘முற்படக்கிளந்த’ என்னுந் தொடருக்கு முன்னே ஆசிரியர் கூறிப்போந்த என்று அமையப்பொருள் காண்பதே பொருத்தமாகும். (1) |