குறிப்பு:- விடுத்தற் கண்ணும் என்பதற்குப் பண்டை உரையாளராய இளம்பூரணர் தலைவியைத் தோழி தலைவனுடன் கூட்டி விடுத்தற்கண்ணும் எனப்பொருள் கூறுவர். ‘போக்கற் கண்ணும்’ என்பது இதனையே குறிக்குமாதலின், இவர் பொருள் ஆசிரியர்க்குக் கூறியது கூறல் என்னும் குற்றம்தரும். அன்றியும் பின் தலைவன் கூற்றுக்களைக் கூறும், ‘ஒன்றாத் தமரினும்’ எனும் சூத்திரத்தில் தலைவன் தலைவியை “ஒன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினும்” என்று தொல்காப்பியர் கூறுதலான் தலைவியைத் தலைவன் உடன் கொண்டு செல்லுதலும் விடுத்துச்செல்லுதலும் உண்டெனத் தெளியக் கிடத்தலின், ஈண்டு விடுத்தல் என்பது தலைவியைத் தலைவன் விட்டுச் செல்லலையே குறிக்குமென்பது ஒருதலை. இச்சூத்திரத்தில் தலைவன் மொழிந்ததை எடுத்துக் கூறித் தலைவியைத் தோழி ஆற்றுவித்தலைக் கூறுதலானும், தலைவி வருந்தத் தலைவன் அவளைவிட்டுச் செல்லுதலுண்டென்பது போதரும். |
‘தலைப்பெயர்த்துக் கொளினும்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் உடன்போய தலைவியைத் தேடிச் செல்லாமல் தாயை மீட்டுக் கொள்ளுதல் எனப்பொருள் கொள்ளுவர் இதற்கு ஆன்றோர் செய்யுள் ஆட்சியின்மையின் இவ்வுரை சிறவாது. இதற்கு நச்சினார்க்கினியர் காட்டும், ‘அவளே, உடன்மர் ஆயமொடு ஓரை வேண்டாது’ எனும் பாட்டில் சுரஞ் செல்லும் தாயை மீட்ட குறிப்பொன்றுமில்லை மகட் பிரிவுக்கு வருந்தும் தாயைத்தோழி ஆற்றுவித்ததையே இச்செய்யுள் குறிக்கிறது. |
“பால்பாற் படுப்பச் சென்றனள்; அதனால் நீஎவ னிரங்குதி அன்னை விழவயர்ந் திருப்பின் அல்லதை இனியே”. |
என்பதே ஈண்டுத் தோழி கூற்றாதல் காண்க. ‘ஒழிந்தது கூறி என நச்சினார்க்கினியர் கொண்ட பாடத்தினும், காலத்தால் முற்பட்ட இளம்பூரணர் கொண்ட ‘மொழிந்தது கூறி’ எனும் பாடமே மரபுநிலை வழாச் சிறப்பும் செவ்வியு முடைத்து - வன்புறை நெருங்குதலாவது, வற்புறுத்திக் கூறலாகும். |
இனி, ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சுகலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் |