அச்சந்தரத்தக்கவாக, அவை அஞ்சாது சென்று இடையூறு மேதங் கருதாதேகும் பிழையை அவர்கட்கு எடுத்துக்காட்டுதலும்; ஊரது சார்வும்-உடன் போவார்க்கு வழித்தங்க அண்மையில் ஊருண்மையை; ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்-அன்பு நிறைந்த உள்ளத்தொடு தலைமக்கட்கு அவர் நலம் பேணிப் பரிந்து கூறுமிடத்தும்; புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்தெதிர் கூறி விடுப்பினும்...காதலால் கூடின தலைமக்கள் பால் அன்புற்ற உள்ளத்தோடு அவர் நிலைமைக்கு வருந்தி எதிரெடுத்துரைத்து அவரை விடுவிக்குமிடத்தும் ஆங்கத் தாய்நிலைகண்டு தடுப்பினும்-தலைமக்களைத் தாங்கண்ட சுரத்தினிடையே தேடிவரும் செவிலித்தாய் நிலைமை கண்டு அவளைமேற்செல்லின் தலை மக்களைக் காண்பை எனக்கூறி அவளைப்போக விடுக்குமிடத்தும்; சேய்நிலைக்ககன்றோர் செலவினும் வரவினும் தொலை தலைமக்களின் உடன் போக்கிலும், அவர் மறுதரவிலும்; கண்டோர் மொழிதல் கண்டதென்ப-உடன் போம் தலை மக்களைக் கண்டவர்கள் கூற்று நிகழ்த்தல், வழக்கின்கண் காணப்பட்ட தென்பர் அகப்பொருள் நூலார். |
பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவினாகிய குற்றங் காட்டற்குச் செய்யுள்: |
“எல்லு மெல்லின்று, பாடுங் கேளாய், செல்லா தீமோ சிறுபிடி துணையே வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென. வளையணி நெடுவே லேந்தி மிளைவந்து பெயருந் தண்ணுமைக் குரலே” |
(குறுந்-390) |
கண்டோர் ஊரணிமை கூறும் கிளவி வருமாறு: |
“நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள், பல்கதிர்ச் செல்வன் கதிரும் ஊழ்த்தனன்: அணித்தாற் றோன்றுவது எம்மூர், மணித்தார் மார்ப! சேர்ந்தனை சென்மோ”. |
(பொருள்-புறத்-சூ-40 உரைமேற்கோள்) |
ஆர்வ நெஞ்சமொடு கண்டோர் கூறியதற்குக் கூற்று: |