பக்கம் எண் :

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் சூ.46381

முன்    நிகழ்ந்தது  காதலர்  பின்  நினைப்பிற்கு  ஏதுவாதல்   அகத்துறையில்  இயல்பாம்  என்பதை
இச்சூத்திரத்தானும்   அவ்வாறு  நினைத்துக்  கூற்று  நிகழ்தலும்  அகத்துறையின்  பாற்பட்டதே  என்பதை
அடுத்த சூத்திரத்தானும் தொல்காப்பியர் விளக்குகிறார்.
 

இனி,     இச்சூத்திரமும்   அடுத்த   சூத்திரமும்  காதற்   கூற்றுக்குப்  பொருளாமாயினும்,  கொண்டு
தலைக்கழிதல்  காட்சி  முதலியன   போலப்  பெரு வரவின்மையான்  அவற்றொடு கூறாது, ஈண்டுக் கூற்று
வகை கூறும் சூத்திரங்களொடு இவற்றை இந்நூலார் கூறினாரென்க.
  

நிகழ்ந்தது நினைத்தற்குப் பாட்டு வருமாறு:
 

“யாரு மில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ?
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே”.
  

(குறுந்-25)
 

இது தலைவி நிகழ்ந்தது நினைத்தற்குச்1 செய்யுள்.
 

இனி, தலைவன் நிகழ்ந்தது நினைத்தற்குச் செய்யுள்:
 

“இரண்டறி கள்வி நங்காத லோளே;
முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்கு னம்மோ ரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே.”
  

(குறுந்-312)
 

1 நினைந்து   தனக்குத்தானே   கூறியதற்குச்   செய்யுள்   என்பது   இவர்   கருத்துப்   போலும்.
சிறைப்புறமாகத் தலைவன் அது கண்டு தலைவி தோழிக்குக் கூறியதும் ஆம்.