இச் சூத்திரத்துள் பாடலுட் பயின்ற பொருள் மூன்று என ஓதி அவற்றுள் உரிப்பொருள் என ஒன்றை ஓதினமையால் புறப்பொருளும் உரிப்பொருளாகியவாறு கண்டு கொள்க.1 |
முறைமையாற் சிறத்தலாவது:- யாதானும் ஒரு செய்யுட் கண் முதற்பொருளும் கருப்பொருளும் வரின், முதற்பொருளால் திணையாகும் என்பதூஉம் முதற்பொருள் ஒழிய ஏனைய இரண்டும் வரின் கருப்பொருளால் திணையாகும் என்பதூஉம் உரிப்பொருள் தானேவரின் அதனால் திணையாகும் என்பதூஉம் ஆம். அவை ஆமாறு முன்னர்க் காணப்படும். அஃதேல், ஒரு பொருட்டு ஒரு காரணம் கூறாது மூன்று காரணம் கூறியது என்னைஎனின், உயர்ந்தோர் என்ற வழிக் குலத்தினால் உயர்ந்தாரையும் காட்டும்: கல்வியான் உயர்ந்தாரையும் காட்டும்: செல்வத்தான் உயர்ந்தாரையும் காட்டும்: அதுபோலக் கொள்க. (முதல் ஏகாரம் பிரிநிலையாகவும், இரண்டாம் ஏகாரம் அசைநிலையாகவும் வந்தன). |
நச்சினார்க்கினியர் |
3 முதல்கரு வுரிப்பொரு ......... காலை |
இது நடுவணைந்திணையைப் பகுக்கின்றது. |
இதன் பொருள்:- பாடலுள் பயின்றவை நாடும் காலை புலனெறி வழக்கிடைப் பயின்ற பொருட்களை ஆராயுங்காலத்து, முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே - முதலுங் கருவும் உரிப்பொருளும் என்ற மூன்றேயாம்: நுவலுங்காலை முறை சிறந்தனவே - அவை தாம் செய்யுட் செய்யுங்கால் ஒன்று ஒன்றினிற் சிறந்து வருதலுடைய என்றவாறு. |
இங்ஙனம் பாடலுட் பயின்ற பொருள் மூன்றெனவே, இம்மூன்றும் புறத்திணைக்கும் உரியவென்பதும் பெறுதும். அது புறத்திணைச் சூத்திரங்களுள், ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’ (56) என்பன முதலியவற்றாற் கூறுப. |
1. அகப்படல் புறப்பாடல் எனக்கூறாது பொதுவில் பாடல் என்றதனால் புறப்பாடலுக்கும் இம்மூன்றும் உரிய என்க. அதனால் புறப்பொருளும் உரிப்பொருளாகும். |