கலித்தொகையில் ஏறுதழுவலாகிய கைக்கிளை முல்லைத் திணையில் அமைத்ததும் பெருந்திணைக் கருத்துகள் பிறதிணைகளில் காணப்படுவதும் அறிக. |
யாரு மில்லை தானே கள்வன் தானது பொய்ப்பின் யான்எவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டுதாம் மணந்த ஞான்றே |
(குறுந்) |
இச்செய்யுள் குறிஞ்சித்திணை. தலைவன் சிறைப்புறமாகத் தலைவி தோழிக்குக் கூறியது. இச்செய்யுளை ஆய்ந்து பார்க்கின் இதன் தலைவி பெருந்திணைத் தலைவியோ என எண்ணத் தோன்றும். |
தலைவன் தன்னைப் புணர்ந்தபோது தலைவி யாரேனும் இக்களவொழுக்கத்தைப் பார்ப்பரோ என்ற எண்ணத்துடனேயே யிருந்தாள் என்பதும் அவ்வெண்ணத்தால் சுற்றுமுற்றும் பார்த்து யாரும் இல்லை என உணர்ந்தாள் என்பதும் அங்கிருந்த குருகும் ஒழுகுநீர் ஆரல் பார்ப்பதையும் தம் ஒழுக்கத்தைப் பாராததையும் கண்டாள் என்பதும் ஆகிய இச்செய்திகள் புலப்படும். எனவே, அவள் புணர்ச்சிக் காலத்தும் தான் கொள்ளும் இன்ப உணர்வினும் அச்ச உணர்வே மிகவும் கொண்டிருந்தாள் என்பதும் புலனாம். இந்நிலை அகத்திணைத் தலைவிக்கு உரியதன்று அதனால் பெருந்திணைக்குரியதாகும். இச்செய்யுள் என்றாலும் தலைவி தலைவனின் வரவு நீட்டிப்பது கண்டு அவன் சிறைப் புறத்தானாய் இருக்கும்போது தானே அவ்வாறு படைத்து மொழிந்ததாகக் கொண்டு இச்செய்யுளை அகத்தொழுக்கமாகிய குறிஞ்சித் திணையில் அமைத்தனர் புலவர். படைத்துமொழிதல் இடத்துக்கேற்பத் தோழிக்கும் தலைவிக்கும் உரியதாதலின் மரபு நிலையதாயிற்று. |
இச்சூத்திரம் உரிப்பொருள் மயக்கம் கூறியது என்பர் அருணாசலம்பிள்ளை. முதற்பொருள் கருப்பொருள் மயக்கம் கூறி உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே எனக் கூறியதால் உரிப்பொருள் மயங்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாதலின் இச்சூத்திரம் உரிப்பொருள் மயக்கம் கூறியது என்பது |