பக்கம் எண் :

412தொல்காப்பியம் - உரைவளம்

(இ-ள்)     இதனொடு   ஒத்துப்பொருள்   முடிகென    உள்ளுறுத்து-யான்   புலப்படக்   கூறுகின்ற
இவ்வுவமத்தோடே   புலப்படக்   கூறாத உவமிக்கப்படும் பொருள் ஒத்து  முடிவதாகவென்று புலவன் தன்
உள்ளத்தே  கருதி;   உள்ளுறுத்து   இறுவதை உள்ளுறை  உவமம்-தான் அங்ஙனங் கருதும் மாத்திரையே
யன்றியுங்   கேட்டோர்   மனத்தின்   கண்ணும்  அவ்வாறே நிகழ்த்து  வித்து அங்ஙனம் உணர்த்துவதற்கு
உறுப்பாகிய சொல்லெல்லாம் நிறையக்கொண்டு முடிவது உள்ளுறையுவமம் என்றவாறு.
 

இதனானே   புலவன்   தான்   கருதியது   கூறாதவழியுங்   கேட்டோர்   இவன்   கருதிய  பொருள்
ஈதென்றாராய்ந்து கோடற்குக் கருவியாகிய சிலசொற் கிடப்பச் செய்தல் வேண்டுமென்பது கருத்தாயிற்று.
 

அது,
 

“வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்
டோங்குய ரெழில்யானைக் கனைகடாங் கமழ்நாற்ற
மாங்கவை விடுந்தாற்றப் பகலல்கிக் கங்குலான்
வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய
பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர!”

(கலி-66)
 

இதனுள்,     வீங்குநீர்  பரத்தையர்  சேரியாகவும், அதன்கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செல்வி நிகழும்
பரத்தையராகவும்     பகர்பவர்     பரத்தையரைத்    தேரேற்றிக்   கொண்டுவரும்   பாணன்   முதலிய
வாயில்களாகவும்,   அம்மலரைச்   சூழ்ந்த  வண்டு  தலைவனாகவும்  யானையின் கடாத்தை ஆண்டுறைந்த
வண்டுகள் வந்தவண்டுக்கு  விருந்தாற்றுதல்  பகற்பொழுது  புணர்கின்ற  சேரிப் பரத்தையற்  தமது நலத்தை
அத்தலைவனை   நுகர்வித்தலாகவுங்,   கங்குலின்  வண்டு  முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு
துயிலுறுதலாகவும்,  பண்டுமருவிய   பொய்கையை   மறத்தல்  தலைவியை  மறுத்தலாகவும், பொருள் தந்து
ஆண்டுப்  புலப்படக் கூறிய  கருப்பொருள்கள்  புலப்படக்  கூறாத  மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க்
கேட்டோனுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க.