பக்கம் எண் :

422தொல்காப்பியம் - உரைவளம்

சொல்லி   இன்புறல் - மறுமாற்றம்    பெறாத   வழியும்  தன்னுணர்ச்சி  தானுரைத்து  மகிழ்வது;  புல்லித்
தோன்றும் கைக்கிளைக்குறிப்பு-பொருந்தி வெளிப்படும் கைக்கிளைத் திணையின் குறிப்பாகும்.
 

குறிப்பு:     ‘கைக்கிளை’   என்பது   ஒருமருங்கு   பற்றிய   குற்றமற்ற   காதலாகும்   காமச்செவ்வி
அறியாச்சிறுமியிடம்     தலைமகனொருவனுக்குத்     தன்னலமறந்து    ‘அவள்    பொருட்டே   வாழ்வு’
எனக்கொள்ளும்    காதற்    பெற்றி   தோன்றுங்கால்,   அது   கைக்கிளை   எனப்படும்.  காதலுணரும்
பருவமுற்றாள்  தன்னைக்   காதலியாத  வழிதான்  அவளைக்   காதலிப்பதை,  ஆடவனுக்கு  ‘நோந்திறப்’
பெருந்திணையாகக்   கொள்வதல்லது  செந்திறக்காதல்  வகையாகப்   பாராட்டுதல்   பழந்தமிழ்  மரபன்று,
பருவமன்மையால்  தன்னைக்  காதலிக்க ஒல்லாத   சிறுமியாயினும்,  அவள் தன் காதலுக்கு உரியாளாதலின்
காதலன்  எனைத்து    வகையானும்   அவள்  நலம்  பேணுவதும்,  தன்   புரைதீர் காதலால் தன்னொடும்
அவளொடும்  ‘கொள்ளாத   கூறாமல்’  பெருமை  பேணும்  பெற்றியனவே சார்த்திக் கூற்று நிகழ்த்துவதும்,
தனக்கு  அவள்  தந்த  காதல்  நோய்க்கு  “அணியிழை  (காமஞ்   சாலாமையின்)   தானே   மருந்தாக’,
வொல்லாமையால்   அவள்    அதற்கேற்ற  பெற்றி   மறுமாற்றம்   கூறவொண்ணாளாயினும்,  அவள்பால்
தன்னுணர்வுரைத்து  மகிழ்வதும்,   குற்றமற்ற  கைக்கிளையின்   குறிகளாகும்   என்பது    இச்சூத்திரத்தில்
வற்புறுத்தப்படுகிறது.
 

அத்தகைய   கைக்கிளையும்  ஆடவர்க்கே  அமைவதன்றி மகளிர்க்குக் கூறுவது மரபன்பு. மகளிர்பால்
ஒரு   தலைக்காம   வெளிப்பாடு அவர்தம்  பெண்ணீர்மைக்குப் பொருந்திய  பொற்புடை நெறியாகாமையின்,
அதனைக்   கைக்கிளையின்   பாற்படுத்தாமல்   பெருந்திணையில்   அடக்குவதே   புலனெறி   வழக்கில்
பண்டையோர் கொண்ட தமிழ் மரபாம்.
 

கைக்கிளைத்     தலைவனுக்கும்  அவன் காமஞ்சாலாக் காதற்  சிறுமிக்கும் வீறுதர வருவனவே அவன்
கூற்றாம்;   அல்லாதன    அவன்    வாய்   பிறவா,  என்பதை   வற்புறுத்தற்குத்  ‘தருக்கிய  புணர்த்து’
என்றுரைக்கப்பட்டது.  ‘தருக்கிய சிறை’  என்னும் கம்பர் சொற்றொடரும் வீறு தரும்  தருக்கின் பெற்றியை
வலியுறுத்தல் காண்க.