நயனின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும் பயனின்று மன்றம்ம காமம் இவள்மன்னும் ஒண்ணுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும் முள்நுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன் கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண்ணின்றி யாவரும் தண்குரல் கேட்க நிரைவெண்பல் மீயுயர் தோன்ற நகாஅநக் காங்கே பூவுயிர்த் தன்ன புகழ்சால் எழில்உண்கண் ஆயிதழ் மல்க அழும்; |
ஓஓ! அழிதகப் பாராதே அல்லல் குறுகினம் காண்பாம் கனங்குழை பண்பு; |
என்று, எல்லீரும் என்செய்தீர் என்னை நகுதிரோ நல்ல நகாஅலிர் மற்கொலோ யானுற்ற அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு புல்லிப் புணரப் பெறின்; |
எல்லா நீ, உற்ற தெவனோமற் றென்றீரேல் எற்சிதை செய்தான் இவன்என் உற்ற திதுவென எய்த உரைக்கும் உரனகத் துண்டாயின் பைதல வாகிப் பசக்குவ மன்னோவென் நெய்தல் மலரன்ன கண்; |
கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டாங்கே ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று மாண்மலர்க் கொன்றை யவன்; |
தெள்ளியேம் என்றுரைத்துத் தேராது ஒருநிலையே வள்ளியை ஆகென நெஞ்சை வலியுறீஇ உள்ளி வருகுவர் கொல்லோ உளைந்தியான் எள்ளி இருக்குவேன் மற்கொலோ நள்ளிருள் மாந்தர் கடிகொண்ட கங்குற் கனவினால் தோன்றினன் ஆகத் தொடுத்தேன்மன் யான்தன்னைப் பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து. |