உள்ளுறை உவமம் ஆளுதலும், இயலியைபும் இன்பமும் பயக்கும் நோந்திறப் பெருந்திணையிலோ பழிபடும் முன் நிகழ்ச்சிகளை நினைத்தலும் கூறலும் நேராமையும், நேரின் இடும்பையன்றி இன்பந்தாராமையும் வெளிப்படை. ஆதலால் அவை பெருந்திணைக்குப் பொருந்தாமை ஒருதலை. உள்ளுறை உவமமும் ஒத்த காம ஐந்திணைகளிலும் புரை தீர்ந்த கைக்கிளையிலும் சிறந்து வருதல்போல் பெருந்திணைக்கு மாட்சிப்படாமை எளிதில் தெளியப்படும். அதனால் இச்சூத்திரச் செம்பொருள் மேற்கூறியதே என்பது தேற்றம். |
இனி, இதற்குப் பழைய உரைகாரர் இருவரும் சூத்திரக் கருத்தொடு பொருந்தாது முரண்பட இருவேறு பொருள் கூறுவர். அவருரை பொருந்தாமை யாராய்வாம். |
இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் தரும் பொருளாவது:- “இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழ்ந்த காட்சியும் ஐயமும் தெரிதலும் தேறலும்’ என்ற குறிப்பு நான்கும் நற்காமத்துக்கு இன்றியாமையாது வருதலின் முற்கூறிய சிறப்புடைக் கைக்கிளையாதற்குரிய என்று கூறுவர் ஆசிரியர் எ-று. இனி இதன் கீழ் நச்சினார்க்கினியர் கூறும் சில சிறப்புக் குறிப்புக்களும் ஈண்டுக் கவனிக்கத்தக்கன. அவையாவன:- “களவியலிற் கூறும் கைக்கிளை சிறப்பின்மையின் முன்னதற்குரிய எனச் சிறப்பெய்துவித்தார். களவியலுள் ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்றது முதலாக இந்நான்கும் கூறுமாறு ஆண்டுணர்க” என்பன. |
இவ்வுரைக் கருத்து இச்சூத்திரத்தால் தொல்காப்பியர் சுட்ட நினைத்ததாமா? இங்கு நச்சினார்க்கினியர் கூறுவது அவருக்கு உடன்பாடாமேல் ஐயமகற்றி அக்கருத்தைப் பொருத்தமாக விளக்கும் சொற்பெய்து சூத்திரிப்பர் அன்றோ? அஃதவர் கருத்தன்மையை ஈண்டும் பிற இடங்களிலும் அவர் சூத்திரச் சொற்போக்கே தெளிய விளங்குகிறது. |
முதலில், ஒரே சூத்திரத்தில் ஈரிடத்தில் வரும் ‘முன்’ என்னும் சொல் அவ்வீரிடத்தும் ஒரேவிதமாகப் பொருள்படவேண்டும் இலக்கண நூலிற் சூத்திரச் சொற்களை எளிதில் பொருள் விளங்குதற்கு மாறாக மயங்க அமைப்பது மரபன்று. இச்சூத்திர முதலில் |