‘முன்னைய நான்கும்’ என்பதில் வரும் “முன்” என்பதைக் கீழே அல்லது பின் எனும் பொருள் குறிப்பதாகக் கொண்டு இடத்தால் முன்னே களவியலிற் கூறும் காட்சி முதலிய நான்கும் எனவும், இரண்டாவதாய் “முன்னதற்கென்ப” என வருமிடத்துள்ள ‘முன்’ என்பதை மேலே அல்லது காலத்தால் முன்னே எனக்கொண்டு, மேற்கூறிய கைக்கிளை பெருந்திணை என்ற இரண்டனுள் கைக்கிளைக்குரிய” எனவும். நச்சினார்க்கினியர் பொருண் முடிவு செய்கின்றார். எனவே, இவ்வொரு சூத்திரத்தில் இருமுறைவரும் “முன்” என்னும் ஒரு சொல்லை - முன்னுக்குப்பின் முரணுவதான இருவேறு பொருளில் இந்நூலார் கூறியதாகக்கொள்ள நேருகிறது. |
“ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே” |
சூத்திரம் எனவும், |
“முதலும் முடிவும் மாறுகோ ளின்றி - - - - - - -பொருண்மை காட்டி - - - - - - - - - - - - - - - நுண்ணிதின் விளக்களது நூலெனப் படுவது” |
எனவும் நூலுக்கும் நூலினுட் சூத்திரத்திற்கும் (செய்யுளியலில்) இலக்கணம் வகுப்பவரே, தம்மிலக்கணவிதிக்கு மாறாகத் தாமே முன்பின் முரணிப் பொருள்நனி விளங்காது கற்பவர் மயங்குமாறு இச்சூத்திரத்தைத் தமது பெருநூலில் யாத்து வைத்தார் எனக் கொள்ளுவது அவர் நூல் நோக்கிற்கும் சொற்போக்கிற்கும் பொருந்தாது. இஃது இருமுறை வரும் “முன்” என்னும் சொல்லை ஈரிடத்தும் தெளிவான ஒருபொருள் குறியாமல் மாறான இருவேறு பொருள் படக்கூறி யாரையும் மயங்க வைக்க இந்நூலார் கருதார் என்பதொருதலை. |
இனி இரண்டாவதாக, இங்கு “முன்னைய நான்கும்” என வரையறைப்பட்டவை, அடுத்து இவ்வியலில் விளக்கப் பெறாதனவாய்ப், பின்னே வெவ்வேறு பொருள் நுதலிய பல்வேறு சூத்திரமும் ஒத்தும் கடந்து வேறோர் இயலில் வேறு பொருளிடைக் கூறப்போனவற்றைக் குறிக்குமெனில் இங்கு இக்கருத்தைத் தெளிய விளக்கியிருத்தல் வேண்டும். இவ்வியலில் இச்சூத்திரம் |