இவ்வியலில், முதற்சூத்திரத்தால் அகத்திணை ஏழென இந்நூலார் தொகுத்து விளக்கினார். இரண்டாம் சூத்திரத்தால் அகத்திணைகள் ஏழனுள் முதலும் இறுதியும் ஆய கைக்கிளை பெருந்திணையெனக் குறித்த இரண்டும் கழித்து இடை நின்ற ஐந்தும் ஒத்தகாம உரித்திணைகள் என்றும், அவ்வைந்தின் நடுநின்ற பாலையொழிய மற்றைய நான்கும் குறிஞ்சி முதலிய நானிலங்களுக்கும் முறையே சிறப்புடையன என்றும் கூறினார். பிறகு “முதல், கரு, உரி,” யெனும் மூன்றாஞ் சூத்திர முதல் “எஞ்சியோர்க்கும்” எனும் நாற்பத்திரண்டாஞ் சூத்திரம் வரை அந்நடுவணைந்திணைகளின் பாகுபாடுகளும் அவ்வவற்றின் சிறப்பிலக்கணங்களும் வகைபெறக் கூறினார். பிறகு “நிகழ்ந்தது நினைத்தற்கு” எனும் (42-ஆம்) சூத்திர முதல் “ஏனை உவமம்” எனும் (48-ஆம்) சூத்திரம் வரை அவ்வைந்திணைகளுக்கும் அமைய வந்து பயிலும் நான்கு பொது இலக்கணங்களைக்கூறி முடித்தார். பிறகு “காமஞ்சாலா” எனும் (49-ஆம்) சூத்திரத்தில் கைக்கிளையையும், அதன் பிறகு “ஏறியமடற்றிறம்” எனும் (50-ஆம்) சூத்திரத்தில் பெருந்திணையையும் விளக்கினார் அவற்றின் பின் “முன்னைய நான்கும்” என்னும் இச்சூத்திரத்தை நிற்க வைத்தார். இவற்றுள் மூன்றாம் சூத்திரத்தால் அன்பினைந்திணைகளும் முதல் கரு உரியென வகைபெற வழங்கும் எனக்கூறி, அவ்வகைகளை விளக்கப் புகுந்தவர் “புணர்தல் பிரிதல்” எனும் 14ஆம் சூத்திரத்தில் உரிப்பொருள் |