(இ-ள்) நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும். புனைந்துரைவகையானும், உலக வழக்கத்தானும்; பாடல் சான்ற புலனெறி வழக்கம் - புலவராற் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம்; கலியே பரிபாட்டு அ இருபாங்கினும் உரியது ஆகும். என்மனார் புலவர்-கலியும் பரிபாடலுமென்கின்ற அவ்விரண்டு கூற்றுச் செய்யுளிடத்தும் நடத்தற்கு உரியதாமென்று கூறுவர் புலவர் என்றவாறு |
இவற்றிற்கு உரித்தெனவே, அங்ஙனம் உரித்தன்றிப் புலனெறி வழக்கம் ஒழிந்த பாட்டிற்கும்1 வருதலும், புலனெறி வழக்கம் அல்லாத பொருள் இவ்விரண்டிற்கும் வாராமையுங் கூறிற்று இவை2 தேவபாணிக்கு3 வருதலுங் கொச்சகக் கலிபொருள் வேறுபடுதலுஞ் செய்யுளியலுள் வரைந்து ஓதுதும் ‘மக்கணுதலிய அகனைந்திணையுமென (தொல் - பொ - அகத் -54) மேல்வரும் அதிகாரத்தானும், இதனை அகத்திணை யியலுள் வைத்தமையானும் அகத்திணையாகிய காமப்பொருளே புலனெறி வழக்கத்திற்குப் பொருளென் றுணர்க. |
பாடல் சான்ற என்றதனாற் பாடலுள் அமைந்தவெனவே பாடலுள் அமையாதனவும் உளவென்று கொள்ளவைத்தமையிற் கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பான்மையும் உலகியல் பற்றிய புலனெறி வழக்காய்ச் சிறுபான்மை வருமென்று கொள்க. செய்யுளியலுட் கூறிய முறைமையின்றி ஈண்டுக் கலியை முன்னோதியது, கலியெல்லாம் ஐந்திணைப் பொருளாய புலனெறி வழக்கிற் காமமுங், கைக்கிளை பெருந்திணையாகிய உலகியலே பற்றிய புலனெறி வழக்கிற் காமமும் பற்றி வருமென்றற்கும், பரிபாடல் தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றி வருமென்றற்கும் என்றுணர்க. |
ஆசிரியரும் வெண்பாவும் வஞ்சியும் அகம் புறமென்னும் இரண்டிற்கும் பொதுவாய் வருமாறு நெடுந் தொகையும் புறமுங் கீழ்க்கணக்கும் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் என்பன |
1 வெண்பா ஆசிரியம் வஞ்சி. 2 கலிப்பா, பரிபாடல். 3 தேவபாணி - கடவுட்பாட்டு. |