பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.9, 1067

யாமமுங்     கழியுந்துணையும்   அக்கங்குல்   வைகுறுதல்;  அது  கங்குல் வைகிய  அறுதியாதனோக்கி
வைகறை  எனவும்  கூறுப. அதுவும்  பாடம்.  நாள்  வெயிற்  காலையை2  விடியலென்றார். விடியல்வெங்
கதிர்காயும்  வேயம லகலறை என்ப. விடியல்  வைகறை  யிடூஉ மூரன் என்றது விடியற்கு முன்னர்த்தாகிய
வைகறையென  உருபுதொக்கு  முன்மொழி  நிலையலாயிற்று3,  பரத்தையிற்  பிரிந்த  தலைவன் ஆடலும்
பாடலுங்  கண்டுங்கேட்டும்  பொழுது  கழிப்பிப் பிறர்க்குப்   புலனாகாமல்  மீளுங்காலம் அதுவாதலானும்,
தலைவிக்குங் கங்குல் யாமங்கழியாது நெஞ்சழிந்து  ஆற்றாமை  மிகுதலான் ஊடலுணர்தற் கெளிதாவதோர்
உபகாரமுடைத்தாதலானும் வைகறை  கூறினார்.  இனித்தலைவி விடியற்காலஞ் சிறுவரைத்தாதலின் இதனாற்
பெரும்  பயன்  இன்றென  முனிந்து   வாயிலடைத்து  ஊடனீட்டிப்பவே  அவ்வைகறை  வழித்தோன்றிய
விடியற்  கண்ணும்  அவன்   மெய்   வேறுபாடு  விளங்கக் கண்டு வாயில் புகுத்தல் பயத்தலின் விடியல்
கூறினார்.
  

‘வீங்குநீர்’ என்னும் மருதக்கலியுள்

“அணைமென்றோள் யாம்வாட வமர்துணைப் புணர்ந்துநீ
மணமனையா யெனவந்த மல்லலின் மாண்பன்றோ
பொதுக் கொண்ட கௌவையிற் பூவனைப் பொலிந்தநின்
வதுவையங் கமற்நாற்றம் வைகறைப் பெற்றதை.”


2. நாள்  வெயிற்காலை  -  வெயில்  தோன்றிய  நாட்காலை.  அது  விடியல்  எனப்படும்.  ‘விடியல்
வெங்கதிர் காயும்’ என்பதால் ஞாயிறு  தோன்றி  வெயில்காயும்  நாளின் முற்பகுதி விடியல் என்பது
பெறப்படும்.
  

3. விடியல்   வைகறை   யிடூஉம்   ஊரன்   என்றதில்   விடியல்  முன்னரும்  வைகறை  பின்னரும்
கூறப்பட்டிருப்பினும்  விடியலுக்கு முன்  உள்ளதாகிய வைகறை  எனப்பொருள்  கொள்க. வெள்ளின்
வைகறை  என்பதில்  சிறப்பு  அமையும்  விடியல்  வைகறை  என வரும் இருமொழிகளில் வைகறை 
என்னும் (இட) முன் மொழியில் பொருள் சிறத்தலால் இது முன்மொழி நிலையாயிற்று.