(இ - ம்.) பொழுது என்னும் முதற்பொருளின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட பொழுது என்னும் முதற்பொருள், பெரும் பொழுது என்றும் சிறுபொழுது என்றும் இரண்டு பகுதியினை யுடைத்து என்றவாறு. என்றாவென்பது எண்ணிடைச் சொல். (10) பெரும்பொழுதின் வகை 11. காரே கூதிர் முன்பனி பின்பனி சீரிள வேனில் வேனி லென்றாங் கிருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே. (இ - ம்.) நிறுத்த முறையானே பெரும்பொழுதினது பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கார் முதலாக வேனில் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறு பகுதியினை உடைத்தாம் புலவோரான் ஆராயப்பட்ட பெரும்பொழுது என்றவாறு. ஆங்கு : அசை: (11) சிறுபொழுதின் வகை 12. மாலை யாமம் வைகறை யெற்படு காலை வெங்கதிர் காயுநண் பகலெனக் கைவகைச் சிறுபொழு தைவகைத் தாகும். (இ - ம்.) சிறுபொழுதின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மாலை முதலாக நண்பகல் ஈறாகச் சொல்லப் பட்ட ஐவகையினை உடைத்தாம் அவ்வவ்வொழுக்கத்திற்குரிய சிறுபொழுது என்றவாறு. அவற்றுள், மாலையாவது நிசியின் முன்னும் எற்பாட்டின் பின்னும் உண்டாகிய காலம். யாமமாவது இடையிரவு, வைகறை
|