(இ - ள்.) வருணன் முதலாகக் கடலாடல் ஈறாகச் சொல்லப்பட்டன வெல்லாம் நெய்தற் கருப்பொருளாம் என்றவாறு. இச் சூத்திரங்களுள் தெய்வ முதலாகத் தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட கருப்பொருள் பதினான்கும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க. (24) உரிப் பொருள் 25. புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் இவற்றி னிமித்தமு மெனவாங் கெய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தே. (இ - ம்.) உரிப்பொருளின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேலெய்திய உரிப்பொருள் புணர்தலும், புணர்தல் நிமித்தமும்; பிரிதலும், பிரிதல் நிமித்தமும்; இருத்தலும் இருத்தல் நிமித்தமும்; ஊடலும் ஊடல் நிமித்தமும்; இரங்கலும், இரங்கல் நிமித்தமும் எனப் பத்து வகையினை யுடைத்தாம் என்றவாறு. என்னை? 1"புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே" என்றாராகலின், இச் சூத்திரத்தானும் ஐந்திணையையும் வேண்டிய முறையானே வைத்தெண்ணலாம் என்பது பெறப்பட்டது. (25) கைகோளின் வகை 26. அளவில் இன்பத் தைந்திணை மருங்கிற் களவுகற் பெனவிரு கைகோள் வழங்கும். (இ - ம்.) ஐந்திணைக்குமுரிய கைகோள் வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) எல்லையில்லாத இன்பத்தையுடைய ஐந்திணையிடத்துக் களவும் கற்புமென இரண்டொழுக்கமும் நிகழும் என்றவாறு.
1. தொல், பொருள், அகத்திணை இயல், சூ: 14.
|