90நூன்மரபு

யகர வகரங்கள் தம் இனத்தொடு  தொடர்தலின்  ஒலிநிலை  திரியாமல் மயங்கும். உம்மை இறந்தது தழுவிய எச்சஉம்மை.
 

எ - டு :வில்யாழ்  -  வெள்யானை - செல்வம்  கள்வர்  எனவரும்.
சொல்யாத்தான் -  வில்வளைத்தான்  எனப்  புணர்மொழியுள்ளும்  வரும். வில்யாழ், வெள்யானை என்பவை பண்புத்தொகை மொழி.
 

இவ்விரண்டு சூத்திரத்தானும் டறக்களின்  முன்னர்க்  கசப  என்பனவும் லளக்களின் முன்னர்க் கசபயவ என்பனவும் தனிமொழி தொடர்மொழிக்கண் இணைந்து நிற்கும் என்பதும் உணர்த்தப்பட்டது.
 

சூ. 25:

ஙஞண நமன எனும்புள்ளி முன்னர்த்

தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே

(25)
 

க-து:

மெய்யெழுத்து  ஆறன் முன்னர் அவற்றிற்கொத்த  வல்லெழுத்து
ஆறும் மயங்குமென்கிறது.
 

பொருள்:ஙஞண  நமன   என்னும்     புள்ளியெழுத்துக்கள்   நிற்க
நெடுங்கணக்கினுள் அவ்வவற்றின்  மேலிடத்து  நிற்கும்  வல்லெழுத்துக்கள் நிரலேவந்து இவற்றின் ஓசையொடு மயங்குதற்குப் பொருந்துவனவேயாகும்.
 

நிலைஒத்தன  என  மாறுக.  நிலையாவது   மயங்கும்  நிலை.  இவை
மெல்லெழுத்தொடு தொடர்தலின் தம்வன்மை திரிந்து நிற்குமென்க.
 

எ - டு :பொங்கர்,  தஞ்சம்,  கொண்டல்,  பந்தர்,  ஆம்பல்,  மன்றல்
எனவரும். பெருங்குன்றம்,  வருஞ்சாத்தன்  எனப்   புணர்மொழியுள்ளும்
கண்டுகொள்க.
 

சூ. 26:

அவற்றுள்

ணனஃகான் முன்னர்க்

கசஞப மயவ அவ் ஏழும் உரிய

(26)
 

க-து:

ணனக்களின்  முன்னர்க்  கசப  என்னும்  வல்லெழுத்தும்  ஞம
என்னும்   மெல்லெழுத்தும்   யவ  என்னும்  இடையெழுத்தும்
மயங்குமென்கின்றது.
 

பொருள்:மேற்கூறப்பெற்ற  ஆறனுள்   ணகரனகரப்புள்ளிகளின்  முன்
மேற்கூறிய டகரறகரங்களேயன்றி  ஒவ்வொன்றின்  முன்னரும்  கசஞபமயவ
என்னும் ஏழு (உயிர்) மெய்யெழுத்துக்களும் தனித்தனியே வந்து அவற்றின்
ஓசையொடு மயங்கற்குரியவாம்.