அப்பால் மூன்றே பலவறி சொல்லே’’ என்று கூறலின் பலவின் பாலைத்திரிபின்றி விளக்கும் படுவ என்ற சொல்லே பாடமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நூற்பாவில் பலரறி சொல்லாகிய ‘என்ப’ என்ற சொல் பின்வருதலின், தெளிவு கருதிப் ‘படுப’ என்ற பாடத்தை விடுத்துப் படுவ என்ற பாடங் கொள்ளப்பட்டது. 33ஆம் நூற்பாவில் உள்ள மொழிவ என்பதும் அது. ‘மொழிவ’ வகர ஈற்றுப் பலவின்பால் வினைமுற்றுப் பெயர். மொழிப என்ற பழைய பாடம் மயக்கந்தருதலின் ஆசிரியர் நச்சினார்க்கினியர் அதனைப் பலர்பால் வினைமுற்றாகக் கொண்டு பொருள் செய்ததோடு இந்நூற்பாவினை இரு தொடர்களாகப் பிரித்துப் பொருள் செய்த நிலையும் ஏற்பட்டு விட்டது. எனவே படுவ, மொழிவ என்ற பாடங்கள் மயக்கந்தீரப் பொருள் செய்ய உதவுவனவாம். |
11 முதல் 18 இறுதியாக உள்ள நூற்பாக்களில் ஆசிரியர்தாம் மெய் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவாக விளக்கி யுள்ளார். இடையே ‘‘எகர ஒகரத் தியற்கையும் அற்றே’’ என்பது பிழைபட்ட பாடம் என்பதும் ‘‘இகர உகரத் தியற்கையும் அற்றே’’ என்பதே தொல்காப்பியத்தின் உண்மைப்பாடம் என்பதும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. வன்மை, மென்மை, இடைமைகளுக்கு ஆசிரியர் தரும் விளக்கம் அவருடைய மொழிநூற் புலமையை வெளிப்படுத்துகிறது. |
மெய்ம்மயக்கம் ஒலித்திரிபுகளை விளக்க எழுந்த பகுதியே ஆதலின் எழுத்தொலி பற்றி இயம்புதற்கென்றே எழுந்த நூன்மரபில் மெய்ம்மயக்கம் பற்றிய (நூற். 22-30) செய்திகள் இடம் பெற்றுள்ளன என்பதனை ஆசிரியர் நிறுவியுள்ளார். ஒலித்திரிபுகளை உணர்த்துமிடத்து எழுத்துக்களின் நட்பு நிலை, பகை நிலை என்பன உய்த்துணர்ந்து கொள்ளப்படுவனவே என்பதனையும் குறிப்பிட்டுள்ளார். |
எகரம், யகரஆகாரம் என்பன வினாவாக நூற்பாவில் சுட்டப்படாமையின் காரணம் (நூ. 32) தெளிவாகப் புலப்படுத்தப் பட்டுள்ளது. |
மொழி மரபு:- |
நூ. 36 குற்றியலுகரம் வல்லாறினையே ஊர்ந்து வருவதன் காரணத்தை ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். நூ.42: ஐ, ஒள இரண்டும் அகரத்தில் தொடங்கி முறையே இகர, உகரங்களாக |