94நூன்மரபு

இவற்றைப் பிரித்தல் நன்னூல் வழிவந்த  பிழை  வழக்காகும்.  இதுபற்றி
ஆய்வறிஞர் வேங்கடராசுலு ரெட்டியார் அவர்களின் விபரீத விளக்கங்களும்
பிறவும் பொருந்தாமையை எனது மெய்ம்மயக்க ஆய்வுக்கட்டுரையுட் கண்டு
தெளிக.
 

இச்சூத்திரத்தான் யரழ என்னும் புள்ளி யெழுத்தின்முன்  கதநபமசவயஞ
என்னும் ஒன்பது உயிர்மெய்யெழுத்தும் ஙகரப்புள்ளி எழுத்தும் மொழிக்கண்
இணைந்துவரும் என்பதும் உணர்த்தப்பட்டது.
 

சூ. 30 :

மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்

தம்முன் தாம்வரூஉம் ரழஅலங் கடையே 

(30)
 

க-து:

ஒத்தஎழுத்துக்கள் மயங்குமாறு கூறுகின்றது.
 

பொருள்:ரழ  என்னும்  இரண்டுமல்லாத  ஏனைய  பதினாறு  புள்ளி
எழுத்துக்களும் தத்தமக்கு முன்னர்த் தாம் வந்து தமது ஓசை திண்ணிதாகப்
புலப்பட மயங்கும் என்றவாறு.
 

ஒத்தஎழுத்துக்கள் இணைந்து வருங்கால்  நின்ற  எழுத்தின்  முன்வரும்
எழுத்தின் ஓசை திண்ணிதாய் அழுத்தம்  பெறுதலின் அதுவும்  ஓராற்றான்
மயக்கமே  என்பதனை  அறிவித்தற்கு  ‘‘மெய்ந்நிலை’’   சுட்டின் தம்முன்
தாம்வரூஉம்   என்றார்.   மெய்ந்நிலை =  பொருள்நிலை.   பொருளாவது
ஈண்டுஓசை. சுட்டுதல் = கருதுதல். அஃதாவது  ஒலியழுத்தத்தைக்  கருதின்
என்றவாறு.
 

இதுகாறும் ஒரு புள்ளியெழுத்தொடு  அதுவல்லாத  பிறமெய்கள்  வந்து
மயங்கும்  மயக்கமே  பற்றிக்  கூறிவந்தமையான்  தம்முன்  தாம்  வருதல்
மயக்கமாகாதோ  என்னும்  ஐயம்  நீங்க  அதுவும்  ஓராற்றான்  மயக்கமே
என இந்நூற்பாவாற்றெளிவு படுத்தினார் என அறிக. மயக்கம் என்பது வலி,
மெலி, இடை என மெய்களுக்கு ஓதப்பெற்ற ஒலிகள் தொடருங்கால் மயங்கி
வருதலைப்  புலப்படுத்தல்.  அவ்வாற்றான் அவை  இணைந்து  தொடரும்
என்பதைக்  கூறுதலும்  (மெய்ம்மயக்க)  இலக்கணக்  கோட்பாடு   என்பது
இச்சூத்திரத்தானும் புலப்படும். இதனான் ரழ  அல்லாத ஏனைய பதினாறும்
தம்முன்தாம் இணைந்து மொழிக்கண் வரும் என்பதும் உணர்த்தப்பட்டது.
 

எ - டு:மக்கள்,  இங்ஙனம்,  நொச்சி,  மஞ்ஞை,  வட்டம்,  அண்ணல்,
தித்தன், வெந்நீர், கப்பல், வெம்மை, வெய்யர், மல்லல்,  தெவ்வர், வள்ளல்,
கொற்றன், கன்னல் எனவரும்.