நூன்மரபு103

இவ்வாய்தம் உயிரைப்போல மெய்யினை ஊர்வதும்  மெய்யினைப்போல
உயிரினை ஏற்பதும் இன்றாதலின் ஈரியலானும் தோன்றும் என்னாது ஈரியல்
மருங்கினும் என்றார். மருங்கு  என்றது  ஒருபுடை  என்னும்  பொருள்பட
நின்றது.
 

இதனை   ‘ஈறியல்   மருங்கினும்’    என்றோதி    ஆய்தம்   புணர்
மொழியிடத்தும்   தோன்றும்   எனப்   பொருள்கூறி,   ஆண்டு  அஃது
குறுகுமென்றும்  விளம்பிக்   கஃறீது  முஃடீது  என  எடுத்துக்  காட்டுவர்
உரையாசிரியன்மார். அவ்வுரையினை ஓராது ஏற்ற பவணந்தியார்,
 

‘‘லளவீற் றியைபினாம் ஆய்தம் அஃகும்’’
 

எனக்கூறி   அதற்குஆய்தக்குறுக்கமெனப்   பெயரிட்டு    அதனையும்
ஒருசார்பெழுத்தாகப் படைத்துச் சென்றார்.
 

ஒருசொல்லின் இடையேயன்றி ஈற்றில் வாராத ஙகரம் டகரம் போல்வன
மரம் + குறிது = மரங்குறிது எனவும் பொருள்  +  குறை =  பொருட்குறை
எனவும், ஙகர டகரங்கள்  மகர  ளகரங்களின்  திரிபாக  வந்தமைபோலக்
கஃறீது  முஃடீது  என்பவை  லகர  ளகரங்களின்  திரிபாதலன்றி ஆய்தப்
புணர்ச்சியாகா என்பது வெளிப்படை. அஃகடிய என்பதும் அவ்வாறே வந்த
வகர ஈற்றுத்திரிபாகும்.
 

இச்சூத்திரத்தின்  நுட்பமும்  பயனும்  ஓராமல்  புணர்மொழி  ஆய்தம்
என்னும் திரிபுணர்ச்சியான் ‘‘ஈறியல்’’ எனப்பாடங் கொண்டமை பிழையாதல்
தெளியலாம். பிறவிளக்கங்களை எனது  சார்பெழுத்து  ஆய்வுக்கட்டுரையுட்
கண்டுகொள்க.
 

சூ. 40:

உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தி னியலா

ஆய்த மஃகாக் காலை யான 

(7)
 

க-து:

ஆய்தத்திற்குக்    கூறிய  அளவாகிய  அரைமாத்திரையினும்
மிக்கு    ஒரோவழி   வரும்  இடங்கூறுமுகத்தான்   அதன்
மாத்திரைக்குப் புறனடை கூறுகின்றது.
  

பொருள்:  ஏனை எழுத்துக்களைப்     போல     நடவாத   (தனித
தன்மையுடைய)     ஆய்தம்,     தனக்குரிய     அரைமாத்திரையளவில்
ஒடுங்கிநில்லாமல் சிறிது மிக்கொலிக்குங்கால், நிறம் பற்றியும் ஓசை பற்றியும்
வரும் சொல்லகத்துச் சிறுபான்மையாகத் தோன்றி  வரும்;  அவையெல்லாம்
குறிப்புமொழிகளாமெனக் கூறுவர் புலவர்.