106மொழிமரபு

‘‘குற்றியலிகரம்’’ என்பது முதலாக இதுவரை கூறப்பெற்ற இலக்கணங்கள்
எழுத்தொலியமைப்புப்  பற்றியனவே  எனினும்  இவ்ஓசை   வேறுபாடுகள்
மொழிக்கண்ணன்றிப்பெறப்படாமையின் நூன்மரபின் ஒழிபாக மொழிமரபின்
முதற்கண் வைத்தோதினார்.
 

சூ. 43: 

நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி 
(10)
 

க-து: 

இனிமொழிமரபிற்குரிய    இலக்கணங்கூறத்   தொடங்கி  இச்
சூத்திரத்தான் எழுத்தினான் மொழியாமாறு கூறுகின்றார்.
 

பொருள்தனித்து ஓரெழுத் தொருமொழியாகி வருவன நெட்டெழுத்து
ஏழுமேயாம்.
 

எ - டு :  ஆ, ஈ, ஊ, ஏ,  ஐ, ஓ, ஒள  எனவும்  கா, நீ, பூ, பே, கை,
வௌ எனவும் வரும்.
 

‘‘மெய்யொடு  இயையினும்  உயிரியல்திரியாது’’  ‘‘உயிர்மெய்   யல்லன
மொழி  முதலாகா’’   ‘‘உயிர்மெய்   யீறும்  உயரீற்   றியற்றே’’  என்பன
முதலாயவற்றான் நெட்டெழுத்தென்றது  உயிர்மெய்யினையும்  அகப்படுத்து
நின்றதென்க. ஏழும் என்னும் முற்றும்மை விகாரத்தாற்றொக்கது.
 

சூ. 44: 

குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே 
(11)
 

க-து: 

இதுவுமது.
 

பொருள்:  குற்றெழுத்து  ஐந்தும்  தனித்து  நிறைவுடைய  மொழியாக
வருதலில்லை. நிறைவுடைய மொழியாவன பெயரும், வினையுமாம். எனவே
குறைவுடையனவாய் இடைச்சொல்லும்  உரிச்சொல்லுமாக  வரும்  என்பது
கருத்து.
 

அஃதாவது   சுட்டுப்பெயர்    வினாப்பெயர்கட்கு    முதனிலையாயும்,
சுட்டிடைச் சொல்லாயும், ஒப்புணர்த்தும் குறையுரிச்சொல்லாயும் வரும்.
 

எ - டு : அவ்வீடு, இப்பொருள், உக்கடல், எவன், ஒவ்வும், எனவரும்.
 

இனி ஐந்தும் என்னும்  முற்றும்மையை  எச்சமாக்கி மொழி  நிறைபாகச்
சிலவருதலும் கொள்க.
 

எ - டு :  து-நொ,  எனவரும்.   இவைபடுத்தலோசையாற்  பெயரும்,
எடுத்த லோசையான் வினையும்ஆம், ஓராற்றான் இவையும்  முதனிலைகளே
ஆதலின் உம்மையாற்றழுவப்பெற்றன என்க.