சூ. 83: | உந்தி முதலா முந்துவளி தோன்றித் |
| தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் |
| பல்லும் இதழும் நாவும் மூக்கும் |
| அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் |
| உறுப்புற் றமைய நெறிப்பட நாடி |
| எல்லா எழுத்தும் சொல்லுங் காலை |
| பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல |
| திறப்படத் தெரியும் காட்சி யான |
(1) |
க-து: | பொதுப்பட எழுத்துக்களெல்லாம் தோன்றுமாறும், அவை உருவாகிப் பிறக்குமாறும் கூறுமுகத்தான் அவற்றைப் பிறப்பிக்கும் நிலைக்களனும் வினைக்களனும் இவை எனக் கூறுகின்றது. |
பொருள்:எல்லா எழுத்தும்=மொழிக்கு உறுப்பாக நிகழும் எல்லா எழுத்துக்களும், உந்திமுதலா முந்து வளிதோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ=கொப்பூழினிடமாகத் தோன்றி மேலெழும் (உதானன் என்னும்) ஓசைக்காற்று, தலையும் மிடறும், நெஞ்சுமாகிய மூவகைக் களத்தும்நிலை பெற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறைநிலையான் உறுப்புற்றமைய = பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமுமாகிய ஐவகை வினைக்களங்கள் உட்பட அவ் எட்டு வகையாகிய தன்மையுடைய உறுப்புக்களைப் பொருந்தியமைதலான், நெறிப்பட நாடிச்சொல்லுங்காலை = அவற்றை அவற்றின் இயல்புதோன்ற நோக்கி ஒருவன் சொல்லுமிடத்து, வேறு வேறியல பிறப்பின்ஆக்கம் = வேறுவேறு இலக்கணத்தையுடைய பிறப்பினான் ஆகும் அவற்றின் உருவும் வடிவும், காட்சியான் திறப்படத் தெரியும் = காட்சியளவையான் செம்மையாகப் புலப்படும். |
எல்லா எழுத்தும் உறுப்புற்றமையை நாடிச் சொல்லுங்காலை பிறப்பின் ஆக்கம் காட்சியான் திறம்படத் தெரியும் எனக்கூட்டி வினைமுடிபு செய்க. வளி=ஓசைக்காற்று. ஆக்கம் (காரியமாகிய) உருவும் வடிவும். காட்சி = மெய்யுணர்வான் எய்தும் தோற்றம். நிலைக்களனும் ஓராற்றான் உறுப்பாகலின் வினைக்களங்களொடு கூட்டி ‘‘எண்முறை நிலையான் உறுப்பு’’ என்றார். ‘அமைய’ என்னும் செயவெனச்சம் காரணப்பொருட்டாய் நின்றது. |
இனி, முந்துவளியானது நெஞ்சு, மிடறு, தலை எனச் செல்லும் முறைப்படி கூறாமல் தலை, மிடறு, நெஞ்சு எனமுறை மாற்றிக்கூறியமைக்கும், மூக்கு, அண்ணம், நா, பல், இதழ், மிடறு |