நூன்மரபு131

என  வழிமுறைப்படிக்கூறாமைக்குங்   காரணம்  என்னையெனின்?  உயிர்
எழுத்துக்களும்  மெய்யெழுத்துக்களும் எண்வகைக்களங்களிலும்  அமைந்து
வேறுவேறு இயலவாய் உருப்பெற்ற  வழி அவை  ‘‘மெய்யொ  டியையினும்
உயிரியல் திரியாது’’ ‘‘புள்ளி யில்லா எல்லா மெய்யும் ...  உயிர்த்த லாறே’’
‘‘மெய்யின்  வழியதுஉயிர்   தோன்று   நிலையே’’  என்னும்  விதிகளான்
உயிரைத்  துணையாகக்  கொண்டு  உயிர்மெய்  எழுத்துக்கள்  ஈரொலியும்
ஓரிசையுமாக    ஒற்றுமையும்,   வேற்றுமையும்  தோன்றப்  பிறத்தலானும்,
மெய்யெழுத்துக்கள்   புள்ளியாய்   ஒலித்தற்கு  அவை  சார்ந்து   நிற்கும்
உயிர்எழுத்தின் இசை  நீளவேண்டுதலானும், முந்து  வளியானது  விரைந்து
சுழலும்     உறழ்ச்சியான்     எழுத்துக்கள்     பிறக்கும்     என்பதைப்
புலப்படுத்தற்கென்க.   அதனானன்றே  ‘‘உறுப்புற் றமைய நெறிப்பட நாடிச்
சொல்லுங் காலை’’ எனச் சொல்லும் முறைமையை விதந்தோதினார் என்க.
 

இனிப்,  பேச்சொலியை    எழுப்புதற்    பொருட்டுப்    புறக்காற்றை
உள்ளிழுக்குங்கால் அக்காற்று வயிற்றின் அடிவரையும்  சென்று  நாதமாகிய
தத்துவத்தோடு கூடி மேல் எழுதலின் உந்தி முதலா முந்துவளி என அதன்
தத்துவ இயல்பு தோன்றக் கூறினார் என்க.  உடலியக்கத்துக்குக் காரணமாக
உள்ள  பத்துவகைக்  காற்றினுள்  ஓசையை  எழுப்புங்காற்றிற்கு  உதானன்
என்பது பெயர்.  உணர்வின்  வெளிப்பாடே  மொழியாதலின்  உணர்வைத்
தூண்டும் இடம் தலை  (மூளை)   யாதலின் அது  எழுத்துப்  பிறப்பதற்கு
மூலமாக அமைந்தது.
 

மொழிநூலார், தலை என்றது நுதலின் கீழ் உள்ள அகப்பகுதி  என்றும்,
அஃது மிடற்றுக்கும் மேற்பகுதியாகலின் தலை எனப்பட்டது  என்றும், அது
மூக்கறையைக் குறிக்கும் என்றும் கூறுவர்.
 

மூக்கு என்றது மெல்லின  எழுத்துக்களைப்  பிறப்பிக்கும்  உறுப்புக்கள்
மெய்யுற ஒற்றியகாலை அவ்வுறுப்புக்களின் அடைப்பை  நீக்கி வெளிப்படும்
வளியிசை    புறப்படும்  இடத்தை.  அஃது  குரல்வளையின்  மேல்நிற்கும்
மூக்கின் அடிப்பகுதியாகிய  துளைவழியாகும்.  அக்காரணத்தால் மூக்கினை
வளிநிலைக்   களனாகக்   கூறாமல்   வினைக்களமாகக்  கூறினார் என்க.
அதனான் வினைக்களனே நிலைக்களனும் ஆயிற்றென்க.
 

எண்வகைஉறுப்பினுள் நெஞ்சும் மிடறும் தலையும் அதிர்வு உறுப்புக்கள்.
மூக்கும்   அண்ணமும்     பல்லும்   நிலையுறுப்புக்கள்.  நாவும்  இதழும் இயங்குறுப்புக்கள்   ஆகும்.  முந்துவளியான்  தோன்றும்  (நாதம்)   ஓசை
ஒன்றேயாயினும் நெஞ்சுவளியின்     அடர்த்தியானும்,    மிடற்றுவளியின்
துரப்பினானும், மூக்குவளியின்