132மொழிமரபு

செறிவினானும்,    இயங்குறுப்புக்களின்     இயக்கத்தானும்   அவ்வோசை
வெவ்வேறெழுத்தொலிகளாய்த்   திறப்படத்   தெரிவன   ஆயின  என்க.
இயங்குறுப்புக்களின் அமைப்பினான் வரிவடிவம் செய்துகொள்ளும் நெறியை
உய்த்துணரவைத்தார் தொன்னூலார். என்னை?  வரிவடிவம்  காலந்தொறும்
எழுதுகருவி, எழுதப்படும் கருவிகட்கு ஏற்ப மாறுபடுதலின்.
 

உலகமொழி  எழுத்துக்கள்  யாவற்றிற்கும்   பொருந்த   எழுத்தொலிக்
கோட்பாடுகளை   விளக்கும்   இச்சூத்திரத்தின்  நுட்பங்களை   விரிக்கின்
பெருகுமாகலின் மாணாக்கர் ஆய்ந்துணர்க.
 

சூ. 84:

அவ்வழிப்,

பன்னீ ருயிரும் தந்நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும் 

(2)
 

க-து:

இதுமுதல்   இந்நூலுள்  வகுத்துக்   கொண்ட  எழுத்துக்களின்
பிறப்பியல்  கூறத் தொடங்கி  முதற்கண்  உயிர்  எழுத்துக்கட்கு
வளியிசைக்களன் கூறுகின்றனர்.
 

பொருள்:மேற்கூறிய நெறிமுறைமையான் உயிர்எழுத்துப் பன்னிரண்டும்
தம்தன்மை     திரியாவாய்    மிடற்று    வளியினாற்    பிறந்திசைக்கும்.
தம்நிலையாவது  குறில்,  நெடில்,  மாத்திரையளவு  ஆகிய  தன்மைகளாம்.
வினைக்கள முயற்சி மேற்கூறுவார்.
 

சூ. 85: 

அவற்றுள்

அஆ ஆயிரண்டு அங்காந் தியலும்
(3)
 

க-து: 

உயிரெழுத்துள் முதலிரண்டற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:மேற்கூறிய உயிர்  பன்னிரண்டனுள்  அகரம்  ஆகாரமாகிய
இரண்டும்   அண்ணத்தின்   செயலாகிய    அங்காத்தல்    முயற்சியான் வெளிப்பட்டு இயலும். அங்காத்தல்=அண்ணாத்தல்.
 

இரண்டும் என்னும் உம்மை தொக்கது. முயற்சி ஒன்றாகக்  கூறப்படினும் அவைதம்முள் இசை வேறுபாடுடைய  என்பதறிவித்தற்கு  ஆயிரண்டு என
விளங்கக்   கூறினார்.   மேல்   வரும்   அப்பாலைந்தும்   என்பதற்கும்
இவ்விளக்கம்   ஒக்கும்.   ‘‘அங்காப்ப’’   என்னும் செயவெனச்சந் திரிந்து நின்றது.
 

சூ. 86: 

இஈ எஏ ஐஎன இசைக்கும்

அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன

அவைதாம்

அண்பல் முதல்நா விளிம்புற லுடைய 
(4)
 

க-து: 

உயிருள் ஐந்தற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.