நூன்மரபு135

பிறந்த   வளியினி   சைக்கும்’’   என்றும்  மெல்லெழுத்துக்கள் “மூக்கின்
வளியிசை   யாப்புறத்   தோன்றும்’’    என்றும்     கூறியுள்ளமையானும்
இடையெழுத்துக்களுள்    யகரம்   மிடற்றெழுவளியிசையால்   தோன்றும்
எனப்புலப்படுத்தி  ஏனைய   இடையெழுத்துக்களுக்கும்   அதுவே   என
உய்த்துணரவைத்தமையானும், எஞ்சிய நெஞ்சு வளி வல்லெழுத்திற்  குரியது
என்பது பெறப்படும்.
 

வல்லெழுத்துக்கட்கும்    மிடற்றுவளியிசையையே    கொள்ளலாகாதோ
எனின்?    ஆகாது.      என்னையெனின்?      உயிரெழுத்துக்களையும், இடையெழுத்துக்களையும்     போலாமல்   நெஞ்சினிடமாக அடர்ந்தெழும்
காற்றான்  உந்தப்பெற்று   வெளிப்படுதலின்  மிடற்றுவளியின்   வேறாகக்
கொள்ளப்படுமென்க.
 

ஈண்டுக்  கூறப்படும் எழுத்துப்  பிறப்புவிதிகள்,  பின்னர்க்  கூறப்படும்
சொற்புணர்ச்சிக்கண்   எய்தும்   இயல்பும்   திரிபுமாகிய  வேறுபாடுகளை
உணர்த்தற்குரிய அளவே சுருங்க ஓதப்பட்டுள்ளன. ஆசிரியர் பிறப்பியலின்
ஏனைய நுட்பமெல்லாம் கூறினாரல்லர் என அறிக.
 

சூ. 93:

அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்

நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்

தாம்இனிது பிறக்கும் தகார நகாரம்

(11)
 

க-து: 

மெய்யெழுத்துள் தகர நகரங்கட்கு வினைக்கள முயற்சி
கூறுகின்றது.
 

பொருள்:தகரமும்    நகரமுமாகிய     மெய்யெழுத்துக்கள்    தாம்,
அண்ணத்தைப்   பொருந்தியிருக்கும்     பற்களின்      அடிப்பகுதியின்
இருபக்கங்களிலும்  நாவினது   முற்பகுதி  விரிந்து  தனது  வடிவு  நன்கு
பொருந்தத் தகரமும்,  நாநுனி  விரிந்து  ஒற்ற  நகரமும்  தத்தம்  இயல்பு
தோன்ற இனிது பிறக்கும்.
 

மேற்பல்லின்  அடிப்பகுதியில்   நாவிரிந்து  நன்கு   பொருந்தாவிடின்
உள்வளி  சிறிதே  வெளிப்படும்.  அவ்வழி  இவை  இடைமைத்  தன்மை
எய்துதற்கு ஏதுவாகுமாதலின்  ‘‘பல்முதல்  மருங்கின்’’  என்றும்,  ‘‘நாநுனி பரந்து’’ என்றும், ‘மெய்யுற’ என்றும், ‘ஒற்ற’ என்றும்  விளங்கக் கூறினார்.
 

ஒவ்வொரு    உறுப்பின்    வடிவமும்   அதனதன்   நிலையில்  இவ்
எழுத்துக்கட்கு உடம்பாகலின் வடிவுகொள்ளும் நிலையை ‘‘மெய்’’ என்றார்.
மெய்உற்றும், நன்கு ஒற்றியும் நின்ற வழி  அவ்எழுத்தின்  தன்மை  நன்கு
புலனாதலின் ‘‘இனிது பிறக்கும்’’ என்றார்.